ரமலான் மாத 1–ஆவது குத்பா

اَلْحَمْدُ للهِ هَدٰينَا السَّبِيْلَ الرَّشَادَ وَ جَعَلَ لَنَا الدِّيْنَ الْاِسْلَامَ خَيْرَ الْاَدْيَانِ فَمَنْ قَامَ وَجْهَهُ لِلدِّيْنِ حَنِيْفًا فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ وَ سَلَّمَ اَمَّا بَعْدُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்று எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.

நமக்கு நல்வழி காட்டியாய குர்ஆன் ஷரீபை நல்கிய அல்லாஹ்வைப் புகழ்ந்து, அதனை வஹீயின் வாயிலாய் வாங்கியளித்த நபிகள் நாயகத்தை (ஸல்) ஆசிகூறி, அப்பால் கவனிக்கக் கடவோம்.

பிரியமுள்ள நேயர்காள்! மெய்யான பக்தியுள்ள முஸ்லிம்களனைவரும் இந்த ரமலான் மாதத்தின் வருகையைக் கண்டு பேருவகை பூக்கின்றனர்; ஏனையோரெல்லாம் இதையொரு வீண் பட்டினிக்குரிய கடுங்காலமென்றே உதாசினம் பேசித் திரிவர். இந்த ரமலான் மாதமென்பது வருஷமொருமுறை நமக்களிக்கப்படும் சரீராப்பியாச, ஹிருதயாப்பியாச, ஆத்மாப்பியாச நற்பயிற்சிக்குரிய பெருமை பொருந்திய புண்ணிய காலமாகும். இம்மாத முழுவதும் நோற்கப்படும் நோன்பால் நம்முடைய சரீரம் எத்துணைப் பரிசுத்தமடைகிறதென்பதை ஆயுர்வேத பண்டிதர்கள் அறிந்துகொண்டிருக்கிறார்கள். “லங்கணம் பரமெளஷதம்” என்று சொல்லப்படுகின்றது. வருஷ முழுதும் உண்டு கொண்டும் உறங்கிக் கொண்டுமேயிருந்து வருவதினால் தேகத்திலுள்ள ஜீரணக் கருவிகளுக்குச் சற்றும் போதுமான ஓய்வு கிடைப்பதில்லை; ஆனால், இந்த ரமலான் நோன்பால் சரீரத்துக்குப் போதிய ஓய்வு கிடைப்பதால், அங்கே அதற்கு முன்பு குவிந்து கிடக்கும் பல்வகையான விஷ பதார்தங்களும் நன்கு வெளிப்பட்டு, நமது சரீரமும் பூரண சுகமடைவதற்கு நல்ல சந்தர்ப்பம் வாய்க்கின்றது. இத்தகைய விரதத்தினாலல்லாமல் சரீரத்தில் சாதாரண காலத்தில் சுமந்துவரும் விஷசத்துக்கள் வெளிப்படுதற்குப் போதுமான ஏது உண்டாவதில்லை.

அடுத்தபடியாக, மனிதன் ஒவ்வொரு நாளும் ஒரே வண்ணமாய் உண்டு உடுத்தி உல்லாசமாயிருந்து வருவதினால், அவனுடைய குணமும் சுறுசுறுப்பையிழந்து, மனமும் மந்தமடைவதற்கு அது காரணமாய் விடுகின்றது; இதனாலும், நமது நித்திய வாழ்க்கையில் வருஷமொருமுறை நம்முடைய பழக்க வழக்கங்களை இந்த ரமலானில் அடியோடு மாற்றிக் கொள்வதனால், அவற்றிற்குப் புதியதோர் உணர்ச்சி உதயமாய்க் கிளர்ச்சி பெற்று வருகின்றது. ஒரேவிதமான வருஷாந்த மந்த வாழ்க்கையினின்று இந்த ரமலான் நோன்பால் மாறுபாடடைவது நமது நன்மைக்காகவே யன்றோ? பதினோரு மாதத்துக்கொருமுறை நமக்கு புதிய உணர்ச்சியையும் உற்சாகத்தையும் உண்டுபண்ணுவதற்கு இந்த ரமலான் நோன்பு எத்தனையோ துணை புரிகின்றது!

இன்னம், இந்த ரமலான் மாதப் பழக்கத்தால் முஸ்லிம்கள் இஸ்லாத்தின் ஜிஹாதுக்குரிய சில அரிய பயிற்சிகளையும் பெற்றுக் கொள்கின்றனர். உதாரணமாக, இம்மாதத்தில் ஆண்டவனது ஆணைக்கிணங்கி நாம் நமக்குரிய அன்னபானாதிகளினின்றும் விலகியிருப்பதோடு, நமக்குச் சொந்தமான ஹலாலான மணவாழ்க்கையினின்றுங்கூடத் தூரத்தில் நிற்கின்றோம். (ரமலானில் இராக்காலங்களில் வீடுகூடலாம்). இதனால், அல்லாஹ்வின் பாதையிலே அவசியம் நேருங்கால் நாம் பெரு முயற்சியுடன் உழைக்க முன்வருங் காலையில், அதனாலேற்படும் பசி தாகம் முதலிய துன்பங்களையும் மற்றுமுண்டான ஜிஹாதின் கஷ்ட நிஷ்டூரங்களையும் சகித்துக் கொள்வதற்குரிய பெரியதொரு பயிற்சியை யடைகின்றோம்.

இன்னம், இந்த ரமலான் மாதத்தில் ஆண்டவனது ஆணைக்கிணங்க நமக்குச் சொந்தமான, நமக்கேயுரிய ஹலாலான அன்ன பானாதிகளினின்றும், ஸ்திரீ புருஷ சேர்க்கையினின்றும் விலகியிருக்கப் பழகிக்கொள்வோமாயின், நமக்குச் சொந்தமில்லாத, நமக்குச் சிறிதும் உரிமையற்றனவாகிய ஹராமான அன்னபானாதிகளினின்றும் ஸ்திரீ புருஷர்களினின்றும் எத்துணை மட்டும் நெடுந்தூரத்தில் பேரச்சத்துடனே நாம் விலகியிருக்க வேண்டுமென்பதை நன்கு அறிந்துணர்கிறோம். ஆண்டவன் கூறினானென்னும் காரணத்தினால் அவனுக்குத் திருப்தியளிக்கும் பொருட்டு அடியார்களாகிய நாம் இந்த ரமலானில் நமக்குப் பாத்தியமான சொந்த விஷயங்களையெல்லாம் ஒதுக்கி வைத்து விடுகின்றோம். உண்மை இவ்வாறாக, அவனால் அறவே வேண்டாமென்று விலக்கப்பட்டவற்றி னின்றும் நாம் எத்துனை மட்டும் நெடுந்தூரத்திலே நீங்கி யிருத்தல் வேண்டுமென்று நினைக்கின்றீர்கள்?

ஈதெல்லாம் ரமலான் மாதத்தில் தேகத்துக்கும், மனத்துக்கும் உண்டாகக்கூடிய பரிபக்குவங்களாகின்றன. ஆனால், ஆன்ம லாபங்களைப் பற்றிப் பேசப்புகுங்கால், இந்த ரமலான் மாத நோன்பால் விளையும் பாரமார்த்திகப் பலன்கள் அனந்தமாம். மற்ற மாதங்களைக் காட்டினும் இம்மாதத்தில் நல்லடியார்களான உண்மை மூஃமின்கள் அதிகமான தொழுகைகளை நிறைவேற்றி, அளவுக்கு மேற்பட்ட தான தர்மங்களைச் செய்யத் தலைப்படுகின்றனர்; – ஆனால், அபாத்திரமான மனிதர்களுக்கும் சோம்பலை வளர்க்கும் பிச்சைத் தொழிலையே தங்கள் ஜன்மத் தொழிலாய்த் தலைமேற் போட்டுக் கொண்டு திரியும் யாசகர்களுக்கும் தானதர்மம் செய்யும்படி இஸ்லா மார்க்கத்தில் சற்றும் கூறப்படவில்லை. – நம் நபிகள் நாயகம் (ஸல்) மற்ற மாதங்களைப் பார்க்கினும் இந்த ரமலானில் அதிகமான வணக்கத்திலும் அதிகமான தானதர்ம விஷயத்திலும் மிகுதியும் ஈடுபட்டிருந்தார்களென்று நாம் நன்கு தெரிந்துகொண்டிருக்கிறோம். இத்தகைய வணக்கங்களாலும் தானதர்மங்களாலும் நம்முடைய பாரமார்த்திக நிலைமை பெரிதும் பக்குவமடைவதுடன், ஆன்ம சுகிர்தமும் அளவிறந்து உயர்வடைகின்றது.

ஆன்மாவின் சுயநலமென்னும் முதற்படியான அம்மாராவின் தன்மையினின்றும், பரஸ்பர நலமென்னும் இரண்டாம் படியான லல்வாமாவின் தன்மையினின்றும், பரோபாகர முத்மஇன்னா என்னும் மூன்றாவது படித்தரத்திலுள்ள அதியுச்ச ஸ்தானத்தை மனிதனுடைய ஆன்மா அடைய வேண்டுமாயின், அதற்குரிய அதிகமான வணக்கத்தையும் அதிகமான தானதர்மங்களையும் மேற்கொண்டொழுகல் அத்தியாவசியமாம். மிதமிஞ்சிய தானதர்மங்களாலேதாம் முத்மஇன்னாவின் படித்தரத்தை இந்த நமது ஆத்மா அடைந்து கொள்ளுதல் சாலும். இக் காரணத்தினால் தான் ரமலான் மாதத்தின் நோன்பென்பது பாரமார்த்திகத்துக்கோர் இன்றியமையாத படித்தரமாகக் கருதப்பட்டு வருகின்றது.

இன்னம், நபிமார்களின் ஞானோதயத்துக்கெல்லாம் நோன்பென்பதுதான் ஓர் அத்தியாவசிய சாதனமாய்க் கருதப்பட்டு வருகின்றது. ஈஸா நபி (அலை) நாற்பது நாள் நோன்பு நோற்ற பின்னரே வேதஞானத்தை அருளப் பெற்றார்கள். இவ்வாறே மூஸா (அலை) அவர்களும் தங்களுக்குரிய கடும் விரதத்துக்குப் பிறகே தேவ தரிசனம் பெற்றார்கள். இவ்வண்ணமாகவே இருபத்தேழுநாள் இராப் பகல் ஓயாக் கடுந்தவ நோன்பு நோற்று ஹிராவில் தஹன்னு தென்னும் அருந் தவம் புரிந்த பின்னரே இரசூல்நாயகம் முஹம்மது முஸ்தபா ரஸூல் (ஸல்) அவர்களுக்கும் குர்ஆன் ஷரீபென்னும் புர்க்கானுல் மஜீது வெளியாக்கப் பட்டது. எனவே, இந்த ரமலான் மாத நோன்பால் இத்தனை வகையான இலெளகிக வைதிக நன்மைகளெல்லாம் விளையக் கூடியனவாயிருக்கின்றன வாதலின், நம்முடைய முஸ்லிம் சகோதரர்களனைவரும் இப்படிப்பட்ட ரமலானை வீணாகக் கழிக்காமல் தத்தம்முடைய இகத்துக்கும் பரத்துக்கும் வேண்டிய எல்லாவிதமான பாரமார்த்திக நன்மைகளையும் பரிசுத்த சுகாந்தியையும் அதிகம் அடைந்து கொள்ளுமாறு எல்லாம்வல்ல அல்லாஹ் ஜல்லஷானஹு வதஆலா நம் அனைவர்க்கும் தனது நேரான பாதையில் சீராக நடாத்தி வைப்பானாக. ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!

شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللّهُ بِكُمُ الْيُسْرَ وَلاَ يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُواْ الْعِدَّةَ وَلِتُكَبِّرُواْ اللّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ

Image courtesy: all-free-download.com

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment