அப்பா – 2035 கி. பி.

by நூருத்தீன்

வீட்டில் நுழையும்போது கவனித்தான். கட்டிலில் சாய்ந்திருந்த அப்பாவின் முகத்தில் அப்படியொரு பூரிப்பு; மகிழ்ச்சி. அன்றுதான் அது வந்திருக்க வேண்டும். நெஞ்சின்மீது கிடத்தி மெய்மறந்திருந்தார்.

மகனின் அரவம் கேட்டதும் இமை திறந்தவர், சிரிப்புடன், “இன்னிக்கு வந்துடுச்சுடா. தொட்டுப் பாரேன். வழுவழுன்னு… பிரமாதம்” என்றவாறு அதை மூக்கில் வைத்து முகர்ந்து, “வாசனை என்னை அப்படியே அந்தக் காலத்துக்குத் தூக்குது. தொட்டுப்பாரு; இந்த ஃபீலே மறந்துபோய் கிடந்தேனே” என்று குழந்தையாய் மாறியிருந்தார்.

குஷியில் குட்டிக்கரணம் அடிப்பாரோ என்று கவலையுடன் சிரித்தான்.

“மகிழ்ச்சி. அனுபவிங்க ப்பா”

“நீயும் ட்ரை பண்ணிப்பாருடா. தொட்டுப் பாரேன். ஸ்பரிசம் எவ்ளோ சுகம்னு புரியும்”

நழுவலாக, “இந்த நூலின் மின் பதிவு என்னிடம் இருக்கு. வாசிப்பேன்” என்றான்.

“மின் எழுத்துகள்ல தொலைஞ்சு, வாசிக்கிற பழக்கத்தை மறந்து, புத்தகங்களையே அழிச்சி ஒழிச்சுட்டீங்க. இன்னிக்குப் பாரு இந்தப் புத்தகத்தை ஆன்லைன் antiques ஸ்டோரில் தேடி, கொள்ளை விலைக்கு வாங்க வேண்டியிருக்கு” என்றார் அயர்ச்சியுடன்.

#குட்டிக்கதை

Related Articles

Leave a Comment