தோழர்கள் – சமரசம் செய்திக் குறிப்பு

by admin

அவர்கள் இறைத்திருப்பொருத்தம் பெற்றவர்கள். அவர்கள் நடந்தார்கள். வரலாறு தன் பாதையை வகுத்துக்கொண்டது. அப்படியிருந்தும்

வரலாற்றின் பக்கங்களில் அவர்களின் முகங்கள் அதிகம் தென்பட்டதில்லை. ஏனெனில், அவர்கள் இறைப் பொருத்தத்திற்காகவே வாழ்ந்திருந்தார்கள்.

அப்படிப்பட்ட தியாகச் சீலர்களான நபித்தோழர்களைப் பற்றி அமெரிக்காவாழ் கணினி தொழில்நுட்ப வல்லுநர் நூருத்தீன் ‘தோழர்கள்’ என்னும் தொடரை சத்தியமார்க்கம்.காம் என்னும் இணைய இதழில் எழுதி வருகிறார். தொடரைப் படித்து உள்வாற்கிய பலப்பல வாசக சகோதரர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நூலின் முதல் பாகம் ‘தோழர்கள்’ என்னும் பெயரிலேயே அச்சில் வெளிவந்துள்ளது.

இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 11.09.2011 அன்று சென்னை அண்ணாசாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது.

பன்னூலாசிரியரும், பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின் முன்னாள் தமிழாசிரியருமான அதிரை அஹ்மத் இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். சத்தியமார்க்கம் இணைய இதழின் ஆசிரியர் ஜமீல் முன்னிலை வகித்த இவ்விழாவில், மனித உரிமைப் போராளியும், பன்னூலாசிரியருமான பேரா. அ.மார்க்ஸ், பேரா. அப்துல்லாஹ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

செல்வி ஷைமா தன் இனிய குரலில் இறைமறை ஓதி விழாவைத் தொடங்கி வைக்க, இணைய அறிஞர் முஹம்மது ரஃபீக் வரவேற்புரை ஆற்றினார். ‘பேறு பெற்ற பெண்மணிகள்’ நூலாசிரியர் அதிரை அஹ்மது அவர்களின் தலைமை உரையில் இத்தகைய நூல்கள் வெளியிடப்பட வேண்டுவதன் வாலத்தேவை உறைக்கும் வண்ணம் உரைக்கப்பட்டது.

பேரா. அ.மார்க்ஸின் உரை, ஆழமானதாக, கருத்துச் செறிவுடனும் விவரணங்களுடனும் அமைந்திருந்தது. அதன்பின்னர் சிறப்புரை ஆற்றினார் பேரா. அப்துல்லாஹ்.

சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பேராசிரியர் அப்துல்லாஹ்வின் பேச்சு, நூலாசிரியரின் பாட்டனார் பெரியவர் தாவூத் ஷா, தகப்பனார் என்.பி. அப்துல் ஜப்பார் ஆகியோரைப் பற்றிய நினைவலைகளையும் கொண்டிருந்தது. வழக்கம்போல் பல உளவியல் நுட்பங்களைத் தன்னகத்தே கொண்டிருந்த பேரா. அப்துல்லாஹ்வின் பேச்சில் ஏகத்துவக் கலிமாவை ‘தோழர்கள்’ உணர்ந்ததைப் போன்றே முழு முஸ்லிம் சமுதாயமும் உணரவேண்டுமென்ற அவா இருந்தது.

ஏற்புரை வழங்கிய நூலாசிரியர் நூருத்தீன் தன்னெழுத்தில் முதிர்ச்சியைத் தூண்டியவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். ‘தோழர்கள்’ நூல் பற்றிய சில விவரங்களை, பகுதிகளை உணர்ச்சிப்பெருக்குடன் அவர் விவரித்போது, பார்வையாளர்களின் விழிகளிலும் நீர்ப்பெருக்கு ஏற்பட்டது.

கவிஞர் இப்னுஹம்துன் (பஃக்ருத்தீன்) இந்நிகழ்வின் தொகுப்பாளராக செயலாற்றினார்.


சமரசம் பத்தரிகையில் கதம்பம் பகுதியில் வெளியான “‘தோழர்கள்’ நூல் வெளியீட்டு விழா“ கட்டுரை.

நன்றி : சமரசம், 1-15 அக்டோபர் 2011

Related Articles

Leave a Comment