பா. தாவின் நூல்களை நாட்டுடமையாக்க வேண்டும்

by admin

நலிவுற்ற இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களை பாட நூல்களில் விரிவாக இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு வேண்டுகோள் விடுத்துள்ளது.

2011 ஜுலை 8, 9, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க காயல்பட்டினத்தில் நடத்துவதற்கு வாய்ப்பளித்த தமிழ்நாடு இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக நிர்வாகிகளுக்கு இம்மாநாடு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. 2011 ஜூலை 8, 9, 10 மூன்று நாட்கள் இம்மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற அனைத்து வகையான ஒத்துழைப்புகளையும் வழங்கிய காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத், சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இம்மாநாட்டு குழுக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறோம்.

3. மாநாட்டின் பேராளர்களாக வெளிநாடுகளிலிருந்து பங்கேற்று உள்ளவர்களைத் தங்க இடமளித்தது. உதவியவர்கள், உபசரித்தவர்கள், தமிழகம் முழுவதுமிருந்தும் வந்துள்ளவர்களுக்குத் தங்க இடமும் உபசரிக்கவும், மாநாட்டுப் பந்தலுக்கும் தங்கியிருக்கும் இடங்களுக்கும் வந்து செல்ல வாகனங்களையும் தந்துதவிய வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி நிர்வாகத்திற்கும், ஆய்வரங்கம் நடத்த இடமளித்துதவிய எல்.கே.மேல்நிலைப்பள்ளி, மகளிர் அரங்கம் நடத்த இடமளித்துதவிய ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் ஆகிய நிர்வாகங்களுக்கும், மூன்றுநாள் பொது நிகழ்ச்சிகளையும் நடத்த இடமளித்துதவிய ஐக்கிய விளையாட்டுச்சங்க நிர்வாகத்திற்கும், இம்மாநாட்டு வெற்றிக்கு உழைத்த, ஒத்துழைத்த ஒவ்வொருவருக்கும் ஆயிரமாயிரம் முறை நன்றி சமர்ப்பிக்கின்றோம்.

4. தமிழகத்தின் இஸ்லாமிய நுழைவாயிலாகப் போற்றப்படும் வரலாற்றுப் பெருமையைப் பேணிப் பாதுகாக்க ஆய்வுகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதோடு, புதைந்து கிடக்கும் கல்வெட்டுகள், பண்டைய கலை பொக்கிஷங்கள், அரபுத்தமிழ் கிதாபுகள், நூல்கள் அனைத்தையும் மீட்டுப் பாதுகாக்க “அருங்காட்சி பாதுகாப்பகம்” ஒன்றை இந்நகரில் நிறுவுவதென இம்மாநாடு முடிவு செய்வதோடு, அதற்கு பூரண ஒத்துழைப்பு அளிக்குமாறு அனைத்து ஜமாஅத்தினரையும், பொதுமக்களையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5. நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களை பெற்றுத்தந்த காயல்பட்டினத்தில் அப்புலவர்களின் ஆக்கங்களை நூல்களாக அச்சிட்டு வெளியிடவும், அதிலிருந்து ஆய்வுக் கட்டுரைகளும், ஆய்வு சொற்பொழிவுகளும் நடத்தப்படவும் பரிசளிக்கவும் அறக்கட்டளை நிறுவவும் இம்மாநாடு முடிவு செய்கிறது.

6. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைத் தமிழ்ப் பாட நூல்களில் விரிவாக இடம் பெறச் செய்ய தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7. சென்னை, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகங்களில் இஸ்லாமிய ஆய்வு இருக்கைகள் அமைக்க இம்மாநாடு வலியுறுத்துகிறது.

8. நலிவுற்ற இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களுக்கு அரசின் சார்பில் உதவி தொகை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

9. தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்படும் நூல்கள் வெளிநாடுகளில் வெளியிடப்படுவதுபோல், இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளியிடப்படும் இஸ்லாமிய தமிழ் நூல்களைத் தமிழ்நாட்டிலும் வெளியிட பதிப்பாளர்களை இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

10. நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையில் இலக்கிய நிகழ்ச்சிகளையும், ஈகைத் திருநாள் சகோதரத்துவ சந்திப்புகளையும் நடத்த அனைவரையும் இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் தனி நபர் தகராறுகளுக்கு சமுதாய, மதசாயம் பூச முற்பட்டால் அதற்கு யாரும் இடமளிக்காமல் அமைதியை நிலைநாட்ட துணை நிற்க அனைவரையும் இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது. அதே சமயம் பிரச்சினைகளுக்கு காரணமானவர்கள் யார் எனக் கண்டறிந்து அப்படிப் பட்டவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கும்படியும், ஒரு போதும் நிர பராதிகளை துன்புறுத்தக் கூடாது என காவல் துறையையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

11. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டிக்கு அடுத்த ஒரே நகராட்சியான காயல்பட்டினத்தில் 45,000 மக்கள் வாழ்கின்றனர். காயல்பட்டினம் கூட்டு குடிநீர் திட்டமும் குடிநீர் அபிவிருத்தி திட்டமும் இந்நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவில்லை என்பதால் இந் நகருக்காக தனியாகக் குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டது.

பொன்னன்குறிச்சியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தனிகுழாய் மூலம் காயல்பட்டினத்திற்கு குடிநீர் வினியோகிக்கும் குடிநீர் திட்டத்திற்கு ரூ. 33 கோடியில் திட்டமிடப்பட்டு கடந்த ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்டு சட்டப்பேரவையிலும் அறிவிக்கப்பட்டது. அந்த குடிநீர் திட்டத்திற்கு இந்ந நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி நடப்பு ஆண்டில் இதனை நிறைவேற்றித்தர தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

12. கல்வி வேலை வாய்ப்பில் மிகவும் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. இதனை 5 சதவீதமாக உயர்த்தித் தர வேண்டுமென தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

13. தூத்துக்குடி-கொழும்பு இடையே கப்பல் சேவை தொடங்கப்பட வேண்டுமென்பது நீண்ட கால கோரிக்கையாகும். அச்சேவை அண்மையில் துவக்கப்பட்டதும் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இந்த கப்பல் சேவையை நிறுத்த வேண்டுமென தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது மிகப்பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு இடையூறு இல்லாத வகையில் தொடர்ந்து இந்த கப்பல் சேவையை தொடர வேண்டுமென மத்திய மாநில அரசுகளை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

14. இலங்கை வானொலியின் தமிழ் சேவை தமிழக மக்களை பெருமளவில் மகிழ்வித்து வந்தது. இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் தடைபட்ட அச்சேவை தற்போது துளிர்விட்டுள்ளது. அது 100 விழுக்காடு பூரணத்துவம் பெற்று மிளர வேண்டும். ரமலான் நோன்பு சஹர் நேர ஒலிபரப்பு உள்ளிட்ட இஸ்லாமிய சேவையும் விரைவில் தொடங்கப்பட வேண்டுமென இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

15. இலக்கியப் பேரறிஞர் தாவூத்ஷா, தமிழக அரசின் சிறந்த கவிஞருக்கான விருதை இருமுறை பெற்ற தனித் தமிழ்த் தென்றல் காரை இறையடியான், இறையருட் கவிமணி பேராசிரியர் கா. அப்துல் கபூர், வரலாற்றுப் புதின ஆசிரியர் செய்யது முஹம்மது ஹஸன் ஆகியோரின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவர்களது குடும்பங்களுக்குப் போதிய ஈவுத் தொகை வழங்க வேண்டுமென வேண்டுகிறோம்.

16. தமிழகத்தில் இனி அமைய இருக்கும் பல்கலைக் கழகங்கள் இரண்டினுக்குத் தேசியத் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பெயரையும், இஸ்லாமியப் பெரும் புலவர் உமறுப்புலவர் பெயரையும் சூட்ட வேண்டும் என்று இம்மாநாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

17. முஸ்லிம் சமுதாயத் தில் ஐஹளு, ஐஞளு, ஐகுளு படிக்க இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கவும் அவர்கள் பயிற்சி பெறுவதற்கு நிதி உதவி அளிக்கவும் சமுதாய புரவலர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

18. அரபுச் சொல் உச்சரிப்புகளுக்கு சரியான தமிழ் மொழி பெயர்ப்புடன் கூடிய கலைச் சொல் அகராதி வெளியிட வேண்டுமென அறிஞர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

19. தமிழ்நாடு அரசு பாடநூலிலிருந்து உலகம் போற்றும் தமிழ் அறிஞர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் கவிதை நீக்கப்பட்டதை அறிந்து இம்மாநாடு வேதனை அடைகிறது. மீண்டும் அக்கவிதையை இடம் பெறச் செய்யுமாறு தமிழ்நாடு அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.

20. பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், முஅத்தின்களுக்கு இன்றைய கால சூழ்நிலைக்கேற்ப ஊதியம் வழங்குமாறும், புனித ரமலான் மாதத்தில் அவர்களுக்கான ஊக்கத் தொகையை உயர்த்திக் கொடுக்குமாறும் சமுதாயத்தை இம் மாநாடு மிகுந்த பணிவன்போடு கேட்டுக் கொள்கிறது.

 

Related Articles

Leave a Comment