வாழ்த்துப்பா

by admin

1
செந்தமி ழதற்குத் தனியிடம் பெற்றுத்
திருமறை மொழியினை விளக்கி
நந்தநன் னபிக ணாயகர் மொழியை
நலிவிலா தெடுத்தெடுத் தெழுதி
முந்தவாழ் பெரியோர் சரிதங்கள் ஞான
முதிர்கலை யரசியல் ஞானம்
சந்ததம் வளர்த்துச் சிறந்தமா சிகையாய்த்
தமிழ்வளர் நாடெலாம் பரவி,

2
தத்துவ இஸ்லாம் எனும்பெய ருடனே
தரணியிற் பன்னெடு நாளாய்ச்
சத்துவத் துடனே வளர்ந்துபின் தாருல்
தனிஇஸ் லாமெனும் நாமம்
பெற்றுவித் தென்னா டெங்கணு முலவி
மார்க்கநல் லறிவுக ளளித்த
மித்திரன் வீழ்ந்து விட்டதை நினைந்து
மெய்ம்மறந் தயர்ந்துபோ யினமால்!

3
இற்றைநாள் முன்ன மிடும்பெய ருடனே
இலங்கியே வெளியில்வந் துலவ
வுற்றதை நினைந்து அளவிலா மகிழ்ச்சி
யுறுகின்றோம் முதுமறை யவனே
கற்றிட வறிவு நிதம்பெரு கிடவே
கலைவளர் மாசிகை யதனை
வெற்றிபெற் றிருந்த நாடெலாம் விளங்க
வைத்திடாய் வேதமா முதலே!

M. உமறு நயினார்,
ஆசிரியர், சின்னக்கிண்ணியா அரசினர் பாடசாலை,
கிண்ணியா. (சிலோன்)


தாருல் இஸ்லாம், நவம்பர் 1947
பக்கம்: 29


Related Articles

Leave a Comment