வேதங்களின் அக்கிரமம் – 3

by பா. தாவூத்ஷா

தன்னுடைய ஜீவனத்தை நல்லவிதமாயும், ஆரோக்கியமாயும் செய்து கொள்வதற்காக மனிதர்களை எந்தவிதமாய்க் கொல்ல முடியுமோ, அந்த விதமாய்க் கொன்று தள்ளவேண்டும். ஆஹா! இதுதான் ஆரிய வேதத்தின் படிப்பினையும், ஈசுவரனது கட்டளையுமாயிருக்கிறது. இதன் பெயர்தான் தர்மம்; இதன் பெயர்தான் ஞானம். இதனாலேயே வேத தர்மத்தை அளந்து பார்த்தல் வேண்டும். மேலும் இதனாலேயே முக்தி, அஃதாவது, இதன் காரணத்தினாலேயே ஈடேற்றம், நித்தியானந்தம் இவைகளெல்லாம் கிடைக்கும். ஆ கைசேதம்!

இதற்கு எதிரிடையாய்க் கீழ்க்காணும் உத்தரவுகளான உபதேசங்களையும் குர்ஆன் ஷரீபிலிருந்து கொஞ்சம் கவனியுங்கள்: “உங்களை (எதிரிகள்) கொல்வார்களாயின், நீங்களும் வேறு வகையின்றித் தற்காப்புக்காக அவர்களைக் கொல்லுங்கள்; ஆனால், வரம்பைமீறி நடப்பது கூடாது; எவ்வளவு நீங்கள் கொடுமை இழைக்கப்பெற்றீர்களோ அவ்வளவேதான் நீங்களும் அவர்களுக்குத் தீங்கிழைக்கலாம்.”

இதற்கு மாறாய் யஜூர் 17. 1,2 பார்க்க: “ஏ பரமாத்மா! யான் பகைவனைக் கொல்வதற்காக உன்னை என் ஹிருதயத்துள் இருத்துகிறேன்.”

என்ன அழகான பரமாத்மா! இவர் தம்முடைய பரிசுத்தத்தைக் கொண்டு ஆரியர்களின் ஹிருதயங்களில் ஏறிச் சவாரி செய்துகொண்டு நிரபராதிகளான பகைவர்களை, நாசப்படுத்தும் வேலையை மேற்கொண்டு நடத்திவருகிறார். இவ்வளவும் ஈசுவரனது போதனையான வேத தர்மத்தை நிலைக்கச் செய்வதற்காகவன்று; ஆனால், ஆரியர்களின் பகைவர்களைக் கொல்வதற்கு மட்டுமேயாயிருக்கிறது. கேவலம்! வெட்கம்! வெட்கம்!!

“அதர்வண வேதத்தின் பத்தொன்பதாவது காண்டத்தின் நாலாவது அனுவாகத்தில் வந்திருக்கிற மந்திர உச்சாடனத்தைப்போல் ஒரு மந்திர உச்சாடனம் இருக்கிறது. அது யதார்த்தமாக ஒரு பயங்கரமான மந்திர உச்சாடனமாய் இருக்கின்றது. முக்கியமாக இருபத்தெட்டு இருபத்தொன்பது முப்பது இலக்கமிட்ட மூன்று சூக்தங்களாக இருக்கின்றன. அதிலொன்று இப்படிப்பட்ட சபித்தல்களுக்கு மாதிரியைக் காட்டப் போதுமானதாயிருக்கும். மற்றச் சபித்தல் மந்திரங்களில் அனேகம் ஒரே மாதிரியாகவே இருக்கும்: ‘ஓ மகிமை பெற்ற குசப்புல்லே! எனது பகைஞரை அழிப்பாயாக. எனது சத்துருக்களை நிர்மூலஞ் செய்வாயாக. ஓ இரத்தினமே! என்னோடு பகைக்கிற எல்லோரையும் நாசஞ் செய்வாயாக.’ அதர்வண வேதம் சத்துருக்கள் நாசத்திற்காக அனேகவித சபித்தலின் மந்திரங்களைக் கொண்டிருக்கிறதென்பது பிரசித்தமாயிருக்கிறது” – (சைதாபுரம், காசி விசுவநாத முதலியாரால் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கும் “வேதப்பொருள் விளக்கம்.”)

இன்னும் யஜூர் 13.9 பார்க்க: “ஏ பராக்கிரமமுள்ள தளகர்த்தரே! தாங்கள் வல்லமையை உண்டு பண்ணிக் கொள்வீர்களாக; மேலும் இந்தப் பூமியைத் தங்கள் கைக்குள் அடக்கி ஆண்டு வருவீர்களாக. பகைவர்களின் முகங்களைத் தாழ்மைப்படுத்துவீர்களாக. யானைக்கும் சேனைக்கும் எஜமானான ராஜாவே! தாங்கள் சென்று தங்கள் பகைவர்களை மிக்க துன்பத்தை அளிக்கும்படியான ஆயுதங்களினால் சங்கரித்துக் கொன்று அவர்கள் கழுத்துக்களில் தூக்கு(த் தண்டனையை)ப் போடுவீர்களாக. இன்னமும் பெரிய பெரிய சாபங்களையும் செய்வீர்களாக.”

பரிதாபம்! வேதம் வெட்டுவதையும், கொல்லுவதையும், செல்வத்தைச் சம்பாதித்து ராஜாங்கங்களைக் கைப்பற்றுவதன் விதத்தையுமே போதிப்பதில் யாதொரு விதமான குறையையும் விட்டு வைக்கவில்லை. இதுமட்டுமன்று. இந்த மந்திரத்தால் சாபத்துக்குண்டான கட்டளைகளும் ஆரியர்களுக்குக் கிடைக்காமலில்லை.

“ருக்வேதம் 10-ஆவது புத்தகத்தின் 6-ஆவது அத்தியாயம் இரண்டு கீதங்களோடு முடிவாகின்றது. அவைகளில் செய்யப்படும் தோத்திரம் எதுக்கென்றால் சத்துருக்கள் நாசமாவதற்கேயாம். இந்தக் கீதங்கள் அதற்காகவே செய்யப்படும் யாகங்களில் ஓதப்படுகின்றன. இவ்வேதத்தின் 7-ஆவது புத்தகத்தின் கடைசிப் பிரிவில் அரசனுடைய சத்துருக்கள் நாசமடைவதற்காக அப்படிப்பட்ட ஓர் ஆசாரியனது கட்டளைக்குட்பட்டு நிறைவேற்றப்பட வேண்டிய கிரியைகள் விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன”—(வேதப்பொருள் விளக்கம்).

ஆச்சரியம்! அரசர்கள் தங்கள் துஷ்டர்களை மிக்க துக்கத்தைத் தரும்படியான ஆயுத பலத்தால் துன்புறுத்துவது மஹா முக்கியமாய்க் காணப்படுகின்றது. ஏ முஸல்மான்களே! இந்தப் படிப்பினையை நல்லவிதமாய்க் கவனித்து உற்று நோக்குங்கள். இப்பொழுது ஆரியர்களால் உங்களை இவ்வாறு செய்ய முடியாமலிருப்பதற்காக ஆண்டவனுக்கு நன்றி செலுத்துங்கள். இன்றைத் தினம் ஆரியர் வசம் அதிகாரம் சிறிது கிட்டிவிடுமாயின், அதன்பின்பு அவர்கள் நம்மை என் செய்யார்? பிறகு அன்னார் வேதம் கற்பித்ததே போன்ற தண்டனையையே ஆரியர்கள் நமக்கு விதித்து விடுவார்கள். ஆதலின், ஆரியர் கையில் அதிகாரம் வந்து சிக்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுவது நம் முஸ்லிம்களெல்லோரின் முதற் கடமையாகும். இதற்காக எல்லாம்வல்ல ஆண்டவனிடம் மன்றாடி இறைஞ்சுவீர்களாக.

இன்னமும் யஜூர் 1. 12. 13 நோக்க: “ராஜாக்களுக்கு அவசியமாவது, நெருப்பேபோல் பகைவர்களை எரித்து நாசப்படுத்திவிட வேண்டியதுதான்.”

அஃதாவது, எப்படி நெருப்பு எந்த வஸ்துவையும் நாசப்படுத்தி வஸ்துவின் பெயர் தெரியாத விதமாய்ச் சாம்பலாக்கி விடுகின்றதோ, அஃதேபோல் ராஜாக்களும் தங்கள் பகைவர்களின் அடையாளமொன்று மில்லாமல் அழித்து நாசப்படுத்திவிட வேண்டியதே நியாயமாம். ஆதலின், இற்றைநாளில் இவ்விந்தியாவில் ஆரிய சமாஜிகளின் அரசாங்கம் இருக்குமாயின், முஸல்மான்களும், கிறிஸ்தவர்களும், மற்றும் ஜைனர்களும், சனாதன ஹிந்துக்களும், சீக்கியர்களும், பிரம்ம சமாஜிகளும், தேவசமாஜிகளும், ஏனை இதர ஜாதியார்களும், வேதத்தில் மேற்கூறப்பட்டதேபோல், நெருப்புச் சகல வஸ்துவையும் எரித்துச் சாம்பலாகவும், நாமமும் அடையாளமும் இல்லாமலும் செய்துவிடுவதே போல், பெயரும் ஊரும் அடையாளமும் ஒன்றும் தெரியாத விதமாய் அழிக்கப்பட்டு நாசப்படுத்தப்பட்டு விடுவார்கள். இதுதான் வேதங்களின் படிப்பினையாய் இருக்கிறது.

இன்னமும் யஜூர்வேதம் 11.8, பார்க்க: “யாராயினும் நம்மிடம் பகைமை கொள்வார்களாயின், அல்லது நமக்குத் தீங்கு செய்வார்களாயின், அல்லது நம்மை ஏமாற்றத்துக்கு உள்ளாக்குவார்களாயின், அப்படிப்பட்ட மனிதர்களை எரித்துச் சாம்பலாக்கி விடுவீர்களாக.”

யார் அவர்களிடம் (அஃதாவது, ஆரியர்களிடம்) பகைமை கொள்கிறார்களோ, அவர்களை எரித்துச் சாம்பலாய்ச் செய்து விடவேண்டும். ஏமாற்றத்துக்கு உள்ளாக்கப்படாமலும், அல்லது துன்பம் இழைக்கப்படாமலும் இருப்பதைக் கருதி, அவர்களை எரித்துச் சாம்பலாகச் செய்துவிட வேண்டும்.

ஆஹா! வேதம் ஆரியர்களுக்கு என்னென்ன விஷயங்களைத்தாம் கற்றுக் கொடுக்கிறது? யார் அவர்களிடம் (அஃதாவது, ஆரியர்களிடம்) பகைமை கொள்கிறார்களோ, அவர்களை எரித்துச் சாம்பலாய்ச் செய்து விடவேண்டும். ஏமாற்றத்துக்கு உள்ளாக்கப்படாமலும், அல்லது துன்பம் இழைக்கப்படாமலும் இருப்பதைக் கருதி, அவர்களை எரித்துச் சாம்பலாகச் செய்துவிட வேண்டும். நல்ல போதனைகள்! ஆதலின், இப்பொழுது ஆரியர்களும், மற்றுமுள்ள சகோதரர்களும், இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் கூறப்பட்ட சுவாமி தயானந்தரின் ஆக்ஷேபங்களை நல்ல விதமாய் உணர்ந்ததன்பின், அவர் இப்படிப்பட்ட பரிசுத்தக் குர்ஆன் ஷரீபைக் கண்ட கண்ட வாறெல்லாம் தூஷிப்பதற்கும், வேதங்களை மட்டும் தமக்கு இயன்றவரை ஆகாயத்தில் உயர்த்திப் புகழ்வதற்கும் முன்வந்ததில் என்ன இரகசியந்தான் இருக்கிறதென்பதைச் செம்மையாய் அறிந்துகொண்டிருப்பார்கள். இன்னமும் பார்ப்பீர்களாக.

“ருக்வேதம் 10-ஆவது காண்டத்தின் ஏழாவது அத்தியாயத்தில் 15-ஆவது ஸூக்தம் முதல் 18-ஆவது ஸூக்தம் வரையில் அதிசயமான கதைகள் அடங்கிய அனேக வாக்கியங்கள் இருக்கின்றன. இக்ஷ்வாகுவினுடைய புத்திரன், அல்லது சந்ததியாகிய அசமாதி என்பவன், தன்னுடைய பூர்வ ஆசாரியர்களைத் துறந்து வேறே ஆசாரியர்களை நியமித்துக் கொண்டான். அந்தப்படி துறந்து விடப்பட்ட அந்தணர்கள் அவன் அழிந்துபோக வேண்டுமென்று மந்திரோச் சாரணங்களைச் செய்திருக்கிறார்கள். ஆகிலும் அவனுடைய புதிய ஆசாரியர்கள், துறந்த பிராம்மணர்களுடைய கெட்ட எண்ணங்களுக்கு எதிரிடையான மந்திரோச் சாரணங்களைச் செய்ததுமல்லாமல், அவர்களுக்குப் பதிலாக நடப்பித்து, அந்த அந்தணர்களில் ஒருவருக்கு மாணமுண்டாகும் படியாயும் செய்தார்கள். மற்றப் பிராம்மணர்கள் தங்களுடைய சொந்தக் காப்புக்காகவும், தங்கள் தோழன் மறுபடியும் பிழைக்க வேண்டியதற்காகவும் துதிகளை ஓதினார்கள்”–(வேதப்பொருள் விளக்கம்). இதுவுமோர் அழகுதான்! மிக விந்தையாய் இருக்கிறது!

சுவாமி தயானந்தர் பொன் வெள்ளிகளுக்கு அடிமைப்பட்டவராய்க் கிடந்தார். மேலும் வேதங்களில் ஆதியிலிருந்து அந்தம்வரை செல்வங்களையும் ஐசுவரியங்களையும் எவ்வாறு சேகரிக்க வேண்டுமென்பதன் படிப்பினையைத் தவிர வேறொன்றும் அவ்வளவாய்க் காணப்படவில்லை. மார்க்கத்துக்கும், அஃதாவது, கடவுளின் வணக்கத்துக்கும் வேதத்துக்கும் யாதொரு விதமான சம்பந்தமும் கிடையாது. இல்லை! கடவுள் வணக்கம் அதில் இருக்கின்றதென்று பாசாங்கு செய்யப்படுமாயின், அப்படிப்பட்ட வணக்கங்கள் குறிப்பாக ‘அதை வணங்குங்கள்; இதை வணங்குங்கள்,’ என்ற அனர்த்த வார்த்தைகளாகவே இருக்கின்றன.

ஹிந்துக்களுக்குள் காயத்திரி மந்திரமென்பது ஒரு மகா சிறந்த மந்திரமாகக் கருதப்பட்டு வருகிறது. அதிலுள்ள “துதிகள் சூரியனை நோக்கிச் செய்தவைகளாகவே இருக்கின்றன. அவையாவன: ஓ பிரகாசம் பொருந்திய விநோத விளையாட்டுடைய ஆதித்தனே! உண்னைக் குறித்த இப்புதிய உசிதமான துதியை உமக்கு நாங்கள் சாத்துகிறோம். எமது வாசகமாகிய இத்துதியால் சந்தோஷமடையக் கடவீர். இந்த அவாவையுடைய மனத்தை, ஆசை கொண்ட ஒரு மனிதன் பெண்மகளைத் தேடுவதுபோல் அணுகுவீராக. சர்வலோகங்களையும் அனுசந்தித்துக் கடாக்ஷிக்கிற பூஷனாகிய ஆதித்தனே! எங்களுடைய இரக்ஷகராய் இருக்கக்கடவீராக.”

“சாவித்திரி என்னும் பரம ஆண்டவனுடைய பணியத்தக்க பிரகாசத்தைத் தியானிக்கக் கடவோமாக! எங்கள் அறிவை விளக்குவாயாக! உணவாசை கொண்ட யாம் பிரகாசம் பொருந்திய சாவித்திரியாகிய தினகரனை வரம் அளிக்கப் பிரார்த்திக்கின்றோம். அவனைச் சிந்தனையால் ஆராதிக்கவேண்டும், அறிவினால் ஆளப்பட்டுப் போந்த மனிதர் சாவித்திரியாகிய தெய்விகத் தினமணியை ஜப தப துதியோடு வணங்குகிறார்கள்”–(வே. பொ. வி. இருக்குவேதம்).

இப்பொழுது இதை வாசிக்கும் சகோதரர்கள் ஊன்றிக் கவனித்துப் பார்த்துக் கூறுவார்களாயின், எப்படித் தீர்ப்புப் பண்ணுவார்கள் என்பது சகலருக்கும் தெரிந்த விஷயமே. இதை விட்டுவிட்டு, எமது பரிசுத்தத் திருமறையான குர்ஆன் ஷரீபு எங்காவது கீழ்க்காணுமாறு கூறி உபதேசம் பண்ணியிருக்கிறதா? என்பதையாவது எண்பித்துக் காட்ட யாரே முன் வருவார்?

‘யார் முஸல்மானாகவில்லையோ, அல்லது முஸல்மான்களிடத்தில் யார் பகைமை வைத்திருக்கின்றனரோ, அல்லது யார் கெட்ட குணங்களை உடையவர்களாய் இருக்கின்றாரோ, அல்லது கெட்ட நடவடிக்கை உடையவர்களாய் இருக்கின்றாரோ, அல்லது யார் அநியாயக்காரர்களாய் இருக்கின்றாரோ, அல்லது முஸல்மான்களல்லாத வேறு அரசர்களாக யார் இருக்கின்றாரோ, அவர்களையெல்லாம் கொன்றுவிடுங்கள், அல்லது தூக்குத்தண்டனை விதியுங்கள், அல்லது புலியின் வாயில், அல்லது இரத்தத்தைப் பருகும் துஷ்ட மிருகங்களின் வாயில் போட்டுவிடுங்கள், அல்லது எரித்துச் சாம்பலாக்கி விடுங்கள், அல்லது மரங்களை வெட்டுவதேபோல் வெட்டிவிடுங்கள்.’

இவ்விதமாயும், மேலும் ‘உனக்கு உன்னுடைய ஞானம் நேர்வழி அளிக்காமல் இருக்கக் கடவதாக; உனக்குச் சந்தோஷத்தை அளிக்காமல் இருக்கக்கடவதாக,’ என்பதாயும், இன்னும் பற்பலவிதமாயும் வேதம் உபதேசிப்பதே போல் எமது திருமறையான பரிசுத்தக் குர்ஆன் எங்காவது கூறியிருக்கிறதென்று எடுத்துக்காட்டுவீர்களாயின், நீங்கள் அப்பொழுதுதான் உண்மை உடையவர்களாவீர்.

ஏ சகோதரர்காள்! இந்த அநியாயமும், இரக்கமின்மையும், முரட்டுத்தனமும் நிரம்பிய வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டுச் சடைவுற்றிருப்பீர்கள். வேதத்தின் முதல் அக்ஷரத்திலிருந்து இறுதி அக்ஷரம்வரை இவ்விதமான உபதேசங்களே நிரப்பப்பட்டிருக்கின்றன. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறே பதம் பார்க்கப் போதும், என்று சொல்வதற்கொப்பாய் வேதத்தினின்றும் சிற்சிலவற்றை மட்டும் நுங்கள் முன்னிலையில் எடுத்துக்காட்டி வேதத்தின் உண்மையான தத்துவத்தைக் காண்பித்திருக்கிறோம். இவ்விதமான படிப்பினையைக் கற்றுக்கொண்ட மனிதன் இயற்கையில் எப்படிப்பட்ட அநியாயக்காரனாய் இருப்பினும், இவ்விதமான வேதங்களை ஏறட்டுப்பார்த்து அவற்றின் பக்கல் விரலையும் நீட்டவும் உரிமயற்றவனாய் இருக்கின்றான்.

இன்னமும் யஜுர் வேதம் அத்தியாயம் 6 – 22, 39, 40, 45, 46, 48, 53, 54 – இலும், அத்தியாயம் 13 – 12, 13 – இலும், அத்தியாயம் 17 – 46, 47, 48, 49, 50, 51, 63, 64, 66, 68, 69, 70, 74, 77, 83, 85, 99 – இலும், அத்தியாயம் 29 – 18, 21, 23, 25, 38, 39, 40, 41, 42, 43, 44, 46, 47, 48, 50, 51, 52, 56, 57 – இலும், அத்தியாயம் 1 – 7, 8, 17, 18, 19, 25, 26 – இலும், இன்னும் இவையல்லாத ஆயிரக்கணக்கான மந்திரங்களிலும் இதே விதமான அக்கிரமங்களும், அநியாயங்களும், அட்டூழியங்களும், மற்றும் பல கொடுமைகளும் கொலைகளும் நிறைந்து கிடக்கின்றன. இவைகளைக்கொண்டு தங்கள் தாகம் இன்னும் தீரவில்லையாயின், தயைசெய்து வேதங்களையே நீங்கள் நேரில் பார்த்துத் தீர்த்துக்கொள்வீர்களாக. மேலும் நமது சுவாமிஜீ அவர்களே இந்த யஜுர் வேதத்துக்கு மொழிபெயர்ப்புச் செய்திருப்பதன் காரணத்தினால்தான் அந்த யஜூர் வேதத்தினின்றுமே யாம் சிலவற்றை உங்களுக்கு எடுத்துக் காட்டித் துலக்கியிருக்கிறோம். ஆனால், எல்லா (நான்கு) வேதங்களிலும் இப்படியே ஏறக்குறைய நல்ல உபதேசங்கள் நிரம்பிக் கிடக்காமல் இல்லை.

இன்னமும் நாம் யஜுர் வேதத்தினின்றுமே மாத்திரம் பெரும்பாலும் ஏன் மேற்கோள்கள் காட்டியிருக்கிறோமெனின், சுவாமி தயானந்தருக்குப் பயபக்தியும், ஒருதலைப்பக்ஷம் இன்மையும், நேர்மையும், நீதமும் எவ்வளவு தூரம் இருந்தனவென்று உணர்த்துவதற்கும் அன்றி, சுவாமி தயானந்தருக்கு வேதங்களில் ஞானம் இருந்ததா? இல்லையா? என்று எண்பித்தற்குமேயாம். சுவாமிஜீ அவர்களுக்கு வேதங்களின் ஞானம் இருந்ததென்று கொள்வோமாயின், மேற்கூறிய மந்திரங்களை அவர் அறிந்திருந்தாரா? இல்லையா? என்று யாம் வினவுகிறோம். அறிந்திருந்தாரென்று வைத்துக்கொண்டால், அது சர்வ சாதாரணமான பாமர ஜனங்களின் அறிவைப்போலவே இருந்திருத்தல் வேண்டும். ஆகவே, சுவாமிஜீ அவர்கள் நமது குர்ஆனெ மஜீதின் மீது ஆக்ஷேபஞ் செய்வதற்கு எவ்வளவு யோக்கியதை உடையவரென்பது வெளிப்படாமற்போகவில்லை; இப்படியிருக்கும் தறுவாயில் தயான்ந்த்ஜீ அவர்கள் அறியாத் தன்மையாகவும், அசங்கதமாகவும், நீசத்தனமாகவும் வாயில் வந்தவாறெல்லாம் எமது பரிசுத்தக் குர்ஆனெ மஜீதின்மீது ஆக்ஷேபஞ் செய்வதால், அவர் வேதங்களில் அறவே ஞானமற்றவராய் இருந்தாரென்பது தெளிவாகின்றது. வேதஞானத்தை அடைய முடியாதவராய்த்தான் அன்னார் இருந்துவந்தார். இல்லை! அவர் ஸம்ஸ்கிருத பாஷையில் பெரிய நிபுணராயிருந்தார், என்றே நாம் வைத்துக்கொண்டாலும், அவர் இவைகளையெல்லாம் வேதத்திலிருந்து நல்லவிதமாய் உணர்ந்தவராயிருந்தும், எமது பரிசுத்தக் குர்ஆனெ மஜீதின்மீது ஓன்றும் அறியாதவிதமாய், வீணானதும் பொய்யானதுமான ஆக்ஷேபங்களைக் கூறிப் பொது ஜனங்களின் ஹிருதயங்களைப் புண்படுத்தி விட்டாரென்றே கூறுவோம். ஆதலின், அறிவுள்ள எந்தப் பகைவனும் இவ்வாறு கூறத்துணியான்.

ருக்வேதம் “ஏழாவது புத்தகத்தின் மூன்றாவது அத்தியாயத்தில் கடைசியிற் சொல்லப்பட்ட இரண்டு கீதங்கள் விசேஷமானவைகளாக இருக்கின்றன. இரண்டாவது கீதத்திற்குச் சம்பந்தமாகிய கதை விசித்திரமானதாய் இருக்கின்றது. வசிஷ்டர்: வருணன் வீட்டிற்கு இரவில் நித்திரை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு, அல்லது சிலர் சொல்லுகிற பிரகாரம் மூன்று நாள் உபவாசமாயிருந்து பசிதீர்த்துக் கொள்ளுகிற நிமித்தம் தானியத்தைத் திருடவேண்டுமென்கிற எண்ணத்தோடு வருகையில், அவ்வீட்டு நாய் தன்மேல் விழ, அப்போது அந்நாய் தூங்கும்படி இதனடியில் வரும் பிரார்த்தனையை அல்லது மந்திரோச்சாரணத்தை அவர் ஓதினார்.” (இதன் பின்னால் இல்லறத் தேவதையை நோக்கிச் செய்யப்படும் துதிகள் காணப்படுகின்றன – வே. பொ. வி).

இப்படிப்பட்ட வியபிசாரத் திருட்டுப் பாதுகாப்பு மந்திரங்கள் இஸ்லாத்தில் இல்லை என்பதுதான் தயானந்த்ஜீக்கு ஒருபெரிய மனக் குறையாய் இருந்துவருகிறது. ஆனால், குர்ஆன் வேதம் கொக்கோக சாஸ்திரம் அன்றே!

இஃது ஒருபுறமிருக்க, ஆரிய சமாஜிகளுள் எத்தனையோ எழுதவும் படிக்கவும் நன்கு தெரிந்த மனிதர்கள் தங்கள் குருவான சுவாமி தயானந்தர் கூறுவதையெல்லாம் கண்மூடித்தனமாயும் குருடனுக்குத் தண்டம் கிடைத்தவிதமாயும் தங்களுக்கு உதவியான உபதேசங்கள் என்றே எண்ணி இறுமாந்து ஏமாந்து கிடக்கின்றனர். ஆனால், ஆரியர்கள் உண்மையில் உள்ளது உள்ளவாறான ஆக்ஷேபங்களைப் புத்திக்கும் யுக்திக்கும் பொருந்தியவாறு கிளப்பியிருப்பார்களாயின், அது மிக நன்றாக இருந்திருக்கும்; அதனால் ஏதாவது நன்மையும் ஏற்படும். ஆனால், அதற்கு மாறாய்ப் பொய்யான வார்த்தைகளைப் பேசுவதனாலும் எழுதுவதனாலும் ஒரு பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை. எனவே, சுவாமிஜீயின் நிலையற்றதும் ஆதாரமற்றதுமான ஆக்ஷேபங்களெல்லாம் கீழ்க்கானும் விஷயத்துக் கொப்பாகவே, இல்லை, இல்லை, அவ்விஷயமாகவே புலப்படுகின்றன.

அஃதாவது, இரண்டு கண்ணும் தெரியாதவனும், வெயிலின் வெளிச்சத்தையும் வெப்பத்தையும் அறிந்துமிராதவனுமாகிய குருடன், கண்களிரண்டும் பளிங்கேபோல் மின்னிக் கொண்டு தன் எதிரிலிருக்கும் உலகத்தின் ஆனந்தத்தையெல்லாம் பிரத்தியக்ஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் ஓர் அழகும் சவுந்தரியமும் வாய்ந்த வாலிபனை நோக்கி, அழகில்லாதவனென்று விளம்பரப்படுத்துவது மன்றி, அவனுடைய நற்கருமங்களின் மீதும் குறை கூறிக்கொண்டிருக்கிறான்.

ஏனெனின், சுவாமிஜீ அவர்கள் அரபி மொழியையும், பார்ஸியையும், உர்துவையும், ஆங்கிலத்தையும் அறியும் விஷயத்தில் குருடராகவே இருந்து வந்தார். மேலும் எமது குர்ஆனெ மஜீதும், அதன் மொழிபெயர்ப்புக்களும், வியாக்யானங்களும் பெரும்பாலும் தயானந்தர் அறிந்து கொள்ள முடியாத அன்னிய பாஷைகளிலேயே இருந்து வருகின்றன. இக் காரணத்தினால் சுவாமிஜீ குர்ஆனை எடுத்து அதில் இலங்கிக்கொண்டிருக்கும் உபதேசங்களையும், அவற்றின் போக்குக்களையும், அவற்றின் நடைகளையும் அவற்றின் தாத்பரியங்களையும், அவற்றின் நன்மைகளையும் அறிந்துகொள்ள முடியாத பொட்டையராய் இருந்தார். ஆதலினால், அவர் எமது குர்ஆனின் விஷயமாய் ஒன்றும் எழுதவும், சொல்லவும் அருகதையற்றவராய் இருந்தார். ஆனால், அவர் என் செய்வார் பாவம்! அவருடைய வேதங்களின் உள் மர்மங்களும், உபதேசங்களும், நீதங்களும், பக்திகளும், அவரது தர்மமும் நீதியும் நன்னடத்தைகளும் உலகத்தினருக்கு வெளிப்படையாய்த் தெரியவேண்டும் என்றிருக்கும் போது, அவர்மீது என்ன குற்றம் இருக்கிறது? ஒன்றுமேயில்லை. இவைகளை வெளிப்படுத்துவதற்குக் காரணபூதமாய் விளங்குவான் வேண்டியே இத்தகைய விஷயத்தில் தலையிட்டுவிட்டு, “ஆப்பதனைப் பிடுங்கிவிட்ட குரங்கதனைப்போல் அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே” என்றவாறு அவஸ்தைப் படுகின்றார் நமது தயானந்த்ஜீ! அந்தோ பரிதாபம்!

-பா. தாவூத்ஷா

படம்: அபூநூரா

தட்டச்சு: யூனுஸ் அஹ்மது 

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

Related Articles

Leave a Comment