ஷரீஅத்தில் மஸ்னூனான ஜியாரத்

நமது ஷரீஅத்தெ முஹம்மதிய்யாவில் (இஸ்லாத்தில்) ஜியாரத் செய்யும் விதம் எவ்வாறு அனுமதிக்கப்பட்டிருக்கின்றதெனின், கப்ராளியான பெரியாருக்கு ஸலாம் சொல்ல வேண்டும். பிறகு கல்லறையினுள் இருக்கும் அவருக்காக

ஜனாஸாவின்போது துஆ கேட்பதேபோல் அல்லாஹ்வினிடம் துஆ கேட்க வேண்டும். இவ்வாறே நாயகம் (ஸல்) அவர்கள் அஸ்ஹாப்களான தங்கள் தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். எப்படி எனின், சஹாபாக்களை நோக்கி, “நீங்கள் கப்ருகளை ஜியாரத் செய்வீர்களாயின், இவ்வாறு சொல்வீர்களாக:-

‘ஏ முஸ்லிம் வர்க்கத்தவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும். மேலும் நாங்களும் அதிக சமீபத்தில் ஆண்டவன் நாடும்போது நுங்களை வந்து சந்திப்போம். எங்களுக்குமுன் சென்றவர்களுக்கும் பின்னே வருபவர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் என்னும் கிருபை செய்வானாக. எங்களுக்கும் நுங்களுக்கும் அல்லாஹ்வினிடம் சுகசாந்தியைக் கேட்கின்றோம். ஆண்டவனே! முன்சென்ற அவர்களுக்குக் கொடுக்கும் கூலியேபோல் எங்களுக்கும் தந்தருள்வாயாக. எமக்குப் பின்னே வரும் அவர்களை ஃபித்னாவென்னும் சங்கடத்துக்கு உள்ளாக்காமல் இருப்பாயாக’.”

இன்னம் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறும் கூறியிருக்கிறார்கள்: “ஒரு மனிதன் மரணமடைந்த சகோதரனின் கப்ரின் வழியே செல்லும்போது, அந்தக் கப்ரை நோக்கி ஸலாம் செய்வானாயின், அல்லாஹ் அந்த மரணமடைந்த சகோதரனின் ஆன்மாவை அனுப்பி இந்த ஸலாத்துக்குப் பதில் சொல்லும்படி செய்கிறான்.”

ஜீவித்துக்கொண்டிருக்கும் ஒருவன் மரணமடைந்த ஒருவருக்காக ஆண்டவனிடம் துஆ கேட்பானாயின், ஜனாஸாத் தொழுகை தொழுதவனது பிரதிபலனை இவன் அடைகின்றான். இதனால்தான் முனாஃபிகீன்களுக்காக (நயவஞ்சகர்களுக்கு) துஆ கேட்ட வேண்டாமெனத் தடை செய்யப்பட்டிருக்கிறது.

அவர்கள் (முனாஃபிக்குகளுள்) எவரேனும் மரணமடைந்து விடுவாராயின், அன்னவருக்காக மன்னிப்பின் துஆவைக் கேட்க வேண்டாம். இன்னம் அன்னவர்களின் சமாதியினருகேயும் நிற்க வேண்டாம்-” (குர்ஆன் 9:84)

ஆனால், உயிருடன் இவ்வுலகத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கும் இவர்கள் மரணமடைந்துபோன அவர்களிடம் சென்று வஸீலா தேடுவதற்கு நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்களில்லை. ஆயின், உயிருடனிருக்கும் இவர்கள் மரணமடைந்து போயிருக்கும் அவர்களுக்காகப் பயன்பட வேண்டுமென்றும் அன்னவர்களுக்காக ஜனஸாத் தொழுகை தொழ வேண்டுமென்றும் அன்னவர்களுக்காக அண்டவனிடம் பாப மன்னிப்பைக் கேட்க வேண்டுமென்றும் மரணமடைந்தவர்களின் விஷயத்தில் ஜீவித்திருப்பவர்கள் துஆ கேட்பார்களாயின், மரணமடைந்தவர்களுக்கு ஆண்டவனின் தயையுண்டாகுமென்றும் துஆ கேட்கும் இம்மனிதனுக்கும் இதனால் நன்மையெனும் பிரயோஜனம் உண்டாகின்றதென்றும் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றருளியுள்ளார்கள். உதாரணமாக, நாயகம் (ஸல்) அவர்களது திருவாக்கியத்தைக் கவனிப்பீர்களாக:

“மரணமடைந்ததன் பின் மனிதனது அமலென்னும் செய்கை முடிந்துவிடுகிறது. ஆனால், சதாகாலமும் நடந்து கொண்டு வரும்படியான சதகாவின் நன்மையும் இவனது கல்வியினால் இவனுக்குப் பின் வரும் மனிதர்கள் பிரயோஜனத்தைப் பெறுவார்களாயின், அக் கல்வியின் நன்மையும், மரணமடைந்த இவனை நினைத்து துஆ கேட்கும்படியான நல்ல பிள்ளையை விட்டுச் சென்றிருப்பானாயின், அந்தப் பிள்ளையினால் ஏற்படும் நன்மையும் மனிதனுக்கு மரணமடைந்ததன் பின்னே வந்து சேர்ந்துகொண்டிருக்கும்-” (புகாரீ).

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>

Related Articles

Leave a Comment