செங்கோல் சமூகம் விமர்சனம் – காதர் கனி

by admin

செங்கோல் சமூகம்! வித்தியாசமான தலைப்பு. ஆம்! செங்கோல் ஆட்சி என்ற வார்த்தையைக் கேள்விப்பட்ட நமக்கு ஒரு சமூகம் எவ்வாறு செங்கோல் சமூகமாக மாற முடியும் என்ற கேள்விக்கான பதிலாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

ஓர் அரசர் தம் குடிமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு இரவும் பகலும் பாடுபடுகிறார் என்ற வார்த்தையை சினிமாக்களின் வாயிலாகவும் கதைகளின் வாயிலாகவும் கேள்விப்பட்டிருப்போம். அவ்விதம் உண்மையாகவே நடந்திருந்தது; அப்படிப்பட்ட காலம் நம் வரலாற்றில் இரண்டறக் கலந்திருந்தது. அதுதான் இரண்டாம் கலீபாவான உமர் ரலி அவர்களின் ஆட்சி முறை.

ஒரு மனிதனிடம் குடிகொண்டுள்ள அன்பு, இரக்கம், கோபம், கருணை, மகிழ்ச்சி, வெகுளித்தனம், இயலாமை போன்ற அத்தனை பண்புகளையும் இறைவனுக்காக, இறைவனின் திருப்தியை பெறுவதே தலையாய நோக்கம் என்று வாழ்ந்த கோமானின் தலைமைத்துவத்தின் தன்மைகளை, இரவின் ஆறு நிகழ்ச்சிகளின் மூலமாக வரலாறாக இந்த புத்தகம் நமக்கு விவரிக்கின்றது.

தலைமைத்துவத்தில் தமக்குக் கிடைத்த படிப்பினைகளுடன் தமக்குக் கீழ் நிர்வாக பொறுப்பில் இருக்கக் கூடிய ஆளுநர்களையும் மாசற்ற மணிகளாக மாற்றிய பாங்கினை அது ஓர் அழகிய பொற்காலம் என்ற இரண்டாம் பகுதி விவரிக்கின்றது.

“ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொள்ளுங்கள்” என்ற இறைமறையின் வரிகளுக்கு ஏற்ப தலைமைத்துவத்தின் உச்சியில் உமர் (ரலி) அவர்கள் இருந்தாலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆளுநர்களின் உபதேசங்களையும் கருத்துகளையும் அகமகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு அதன் மூலமும் இறை திருப்தியை நாடிய வரலாற்றினை வாசிக்கும் பொழுது கண்களில் இருந்து நீர் கசிவதைத் தடுக்க முடிவதில்லை.

குற்றத்திற்கு தண்டனை கொடுப்பது ஒரு வழக்கம்தான். ஆனால் தனக்கென்று ஒரு குளியலறையை ஏற்படுத்திக் கொண்டதற்காக மூன்று மாதங்கள் ஆடுகளை மேய்ப்பதற்கு ஆளுநருக்கு தண்டனை / வேலை அளிக்கப்படுகிறது. பகட்டும், பெருமையும் உன்னிடமிருந்து அகல்வதற்காகவே இந்த வேலை வழங்கப்பட்டது என்று உமர் (ரலி) அவர்கள் அதற்கான காரணம் கூறி மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரையே ஆளுநராக மீண்டும் நியமிக்கிறார். எப்படிப்பட்ட ஒரு பொற்காலம்!

முன் தேதி மடல்கள் என்ற மூன்றாவது பகுதி பதினைந்து கடிதங்களைத் தாங்கி நிற்கிறது. நபித் தோழர்களுக்கு அடுத்த தலை முறையினராக வந்த ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் தன்னை ஆளும் அரசருக்கு எழுதிய மடல் காலத்திற்குமான பொக்கிஷம். ஆட்சி செய்பவருக்கு அவர் எழுதியிருந்தாலும் அந்த கடிதத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயமும் இறை நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருக்குமானது! எக்காலத்திற்குமானது!

அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), அலீ (ரலி) மற்றும் ஏனைய சஹாபாக்கள் எழுதிய கடிதங்களில் நிகழ்கால சமூகத்திற்கு பல்வேறு படிப்பினைகள் பொதிந்து கிடக்கின்றன.

தனிப்பட்ட முறையில் இந்த நூல் எனக்குக் கீழ்க்கண்ட படிப்பினைகளையும் தெளிவுகளையும் கொடுத்தது:

  1. இறையச்சத்தின் அளவுகோல்
  2. குடும்பத்தின் மீதான பொறுப்புகள்
  3. சமூகத்தின் மீதான பொறுப்புகள்
  4. தலைமைத்துவ பண்புகள்
  5. பொருளாதார அணுகுமுறைகள்
  6. மன்னிப்பின் அவசியம்
  7. இறை கட்டளையின் எதார்த்தம்
  8. சஹாபாக்களின் அறிவுரைகள்
  9. நிலைகுலையாமை
  10. அறிவைப் பகிர்ந்து கொள்ளும் திறன்கள்

மேலும் பல்வேறு சுருக்கச் செய்திகளையும் அறிவுரைகளையும் இந்த புத்தகம் தாங்கி நின்றாலும் பின்வரும் வாக்கியங்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு பல்வேறு சிந்தனைத் தெளிவுகளைத் தந்தன.

அதிகம் சிரிப்பவர் கண்ணியத்தை இழக்கிறார்; அதிகம் பரிகாசம் புரிபவர் தன் மதிப்பை இழக்கிறார்.
அதிகம் பேசுபவர் தவறு இழைக்கிறார். அதிகம் தவறு இழைப்பவர் மேன்மை குணத்தை இழக்கிறார்; மேன்மையை இழப்பவர் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை இழக்கிறார். எவர் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை இழக்கிறாரோ அவர் ஆன்மீக வாழ்வில் இறந்து விடுகிறார்.

அறிவற்ற நயவஞ்சகனை விட புத்திசாதுர்யமும் மார்க்க அறிவும் நிரம்பிய நயவஞ்சகன் இஸ்லாமிய சமூகத்திற்குப் பெரும் கேடு விளைவிப்பான்.

உலகைச் சார்ந்த ஆதாயங்கள் கிடைக்கும் போது அதிகம் மகிழ வேண்டாம்.

மிக அருமையான வடிவமைப்பும், எழுத்துருக்களையும் கொண்டு அழகிய புத்தகமாக வெளியிட்ட நாணல் பதிப்பகத்திற்கும், இஸ்லாமிய வரலாறுகளை மிக எளிமையான எழுத்துக்களின் மூலம் தமிழ் கூறும் முஸ்லிம் சமூகத்திற்கு தொடர்ந்து கொடுத்து வரும் இந்நூலின் ஆசிரியர் நூருத்தீன் அவர்களுக்கும் வல்ல இறைவன் ஈருலகிலும் நன்மைகளை அருள்வானாக. ஆமீன்!

அன்புடன்
பார்த்திபனூர் ஷா.காதர் கனி


செங்கோல் சமூகம்
ஆசிரியர்: நூருத்தீன்
பக்கங்கள்: 184
விலை: ரூ. 210

நாணல்
82, மூர் தெரு, சென்னை 600001
தொலைபேசி: 8754624916
மின்னஞ்சல்: naanalbooks@gmail.com


 

Related Articles

Leave a Comment