வரலாற்றின் வெளிச்சத்தில் தலைமைத்துவ வழிகாட்டுதல்
இஸ்லாமிய தலைவர்கள் நேர்மை, பொறுப்புக்கூறல், ஒழுக்கம், பொறுமை போன்ற பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
தலைமைக்கு வேறெந்த மதமும் கொடுக்காத முக்கியத்துவத்தை இஸ்லாம் கொடுத்திருக்கிறது. குர்ஆனும் அதன் நடைமுறை விளக்கமான பெருமானார் (ஸஸ்) அவர்களின் வாழ்வும் தலைமைக்கு வேண்டிய பண்புகளைப் பற்றி வழி காட்டுகின்றன.
மூவர் ஒரு பிரயாணம் செய்தாலும் அதில் ஒருவரை தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள் என்று தலைமையின் அவசியத்தை இஸ்லாம் உணர வைக்கிறது. இதன் நீட்சியாக கலீஃபா உமர் அவர்களின் தலைமை பண்பை உணர்ந்து கொள்ளக் கூடிய வகையில் செங்கோல் சமூகம் என்கிற ஆகச் சிறந்த தலைமைத்துவ வழிகாட்டி நூலை எழுத்தாளர் நூருத்தீன் தமிழ் கூறும் நல் உலகிற்கு வழங்கி இருக்கிறார்.
இந்த நூல் மூன்று தலைப்புகளில் பல்வேறு பொருண்மைகளில் ஆளுமை திறன்களை அறிந்து கொள்ள உதவுகிறது.
முதலாவதாக கலீஃபா உமர் (ரலி) அவர்களுடைய இரவு உலா குறித்ததாக அமைந்திருக்கிறது. பாலூட்டும் குழந்தைக்கு அரசு கஜானாவில் இருந்து நிவாரணம் வழங்குதல், நெடுந்தொலைவில் பசியில் தவிக்கும் குடும்பத்திற்கு உணவுப் பொருட்களைத் தமது தோளில் தாமே சுமந்து வந்து வழங்கி சேவை செய்தல் உள்ளிட்ட தகவல்கள் மனதை உருக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன.
போருக்குச் செல்லும் கணவர் நான்கு மாத காலத்திற்குள் வீடு திரும்ப வேண்டும், இல்லை என்றால் மனைவியை விவாகரத்துச் செய்ய வேண்டும் என்கிற நுணுக்கமான இல்லறவியல் சட்டங்களை நிறைவேற்றுதல்; வழிப்போக்கருக்கு, இரவில் தமது மனைவியை அழைத்துச் சென்று பிரசவம் பார்த்ததோடு தமது கரங்களால் உணவு தயாரித்து அந்தப் பெண்ணுக்கும் அவள் கணவருக்கும் விநியோகித்தல் ஆகியன கலீஃபா உமர் என்ற எளிய மனிதரின் உயர்ந்த தலைமைப் பண்புகளை எடுத்து இயம்புகிறது.
இவற்றையெல்லாம் விட உச்சமாக, பாலில் கலப்படம் செய்ய விரும்பாத நேர்மையான பெண்ணைத் தமது மருமகளாக ஏற்றுக்கொள்ளும் சம்பவம் தற்காலத் தலைவர்களுக்கு ஆகச்சிறந்த வழிகாட்டுதலாகும்.
இரண்டாவதாக கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கும் அவருடைய ஆளுநர்களுக்கும் இடையிலான நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன. பொது மக்களைக் கையாளும்போது கடும் தண்டனையிலும் எத்தகைய இலகுவான நடைமுறையைக் கையாள வேண்டும் என்பதில் உமர் (ரலி) தனிக் கருத்துக்கொண்டிருந்தார் என்பதை அறிய முடிகிறது. ஆட்சியில் உள்ளவர்கள் பொதுமக்களைத் தான்தோன்றித்தனமாக நடத்தி விடக்கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இருந்திருக்கிறார். அவரின் நோக்கம் மக்களைச் சிறந்த இஸ்லாமிய குடிமக்களாக மாற்ற வேண்டும் என்பதாக இருந்திருக்கிறது என்பதை இந்த நூல் வழி அறிய முடிகிறது.
உமரின் ஆட்சியில் தட்டுங்கள் திறக்கப்படும் என்பதற்குப் பதிலாகப் தட்டத் தேவையில்லை திறந்தே இருக்கும் என்கிற அளவில் ஆளுநர்களின் வீடுகளுக்கு, கதவுகள் பூட்டுகள் இல்லாமல் பெரும் திரை சிலைகள் மட்டுமே அமைக்கப்பட்டு இருந்தன. கூபா ஆளுநர் ஸஅத் பின் அபி வக்காஸ் (ரலி) அவர்கள் தமது இல்லத்திற்கு வாயிற் கதவு அமைத்துவிட்டார் என்ற தகவல் அறிந்தவுடன், ‘அந்த வாயில் கதவை கொளுத்தி விட்டு வருக’ என்று ஆணை பிறப்பித்திருக்கிறார் உமர்.
கொள்கைகளுக்காகவும் மக்களுக்காகவும் வாழ்பவர் ஒருபோதும் சாதாரண மக்களை விட்டு விலகி இருக்க மாட்டார். அதைத்தான் உமரின் வாழ்க்கைச் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. உமர் ஆட்சித் தலைவராக ஆன பின்னரும் ஏழைகளை மறக்கவில்லை. இஸ்லாமிய ஆட்சி நீடித்து நிலைக்க வேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வை அவரிடம் நிலைத்திருந்தது என்பதை இந்த நூல் வழியே உணர முடிகிறது.
மூன்றாவதாக முன் தேதி மடல்கள் என்ற தலைப்பில் முக்கியக் கடிதங்கள் இந்நூலில் இடம் பிடித்திருக்கின்றன. கடிதத் தொடர்பு என்பது தற்போது வழக்கொழிந்து போயிருக்கும் சூழலில் இந்தக் கடிதங்கள் நம் மனதிற்கு மருந்துடுகின்றன.
ஹசன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் தமது தலைவருக்கு அதாவது கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸூக்கு (ரஹ்) எழுதிய கடிதம் ஆழமான கருத்துகள் அடங்கிய வரலாற்றுப் பொக்கிஷமாகும். போர்க்களத்தில் இருக்கும் தமது தளபதிக்கு கலீஃபா அபூபக்கர் (ரலி) எழுதிய கடிதம் தலைமைப் பண்புக்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தலைவர்கள் என்பவர்கள் தமக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ஆணை பிறப்பிப்பது மட்டுமல்ல தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் வழங்க வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இந்த மடல். ஈராக் பஸ்ரா நகரின் ஆளுநர் அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) சிறந்த தகுதி உள்ள நபர்தாம் என்றாலும் அவருக்கு நீதி சார்ந்த சட்டங்களை விவரித்து எழுதி இருக்கும் மடல் தேர்ந்த ஆசிரியரைப் போன்ற வழிகாட்டுதலை சமூகத்திற்கு வழங்கும்.
இந்தியாவிற்கு உமரின் ஆட்சி வேண்டும் என்று காந்தியடிகள் சொன்னதற்கு என்ன காரணம் என்பதை இந்த நூலைப் படிப்பவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். நாட்டின் ஆட்சித் தலைவர்களுக்கும் இயக்கத்தின் தலைவர்களுக்கும் மட்டுமல்ல குடும்பத் தலைவர்களுக்கும் இந்த நூல் நேரிய வழிகாட்டியாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
அரும்பாவூர் தமிழவன்
நன்றி: மக்கள் உரிமை, ஏப் 18 – 24, 2025
செங்கோல் சமூகம்
ஆசிரியர்: நூருத்தீன்
பக்கங்கள்: 184
விலை: ரூ. 210
நாணல்
82, மூர் தெரு, சென்னை 600001
தொலைபேசி: 8754624916
மின்னஞ்சல்: naanalbooks@gmail.com