அகிலத்தின் அருட் கொடை நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் வாழ்க்கை வரலாற்று சீரா நூல்கள் தமிழில் பரவலாக வந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் நபிகளாரின் பாசறையில் பாடம் பயின்ற நபித் தோழர்களின் வரலாற்று நூல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவந்து கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
2011ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்; மக்காவில் நாம் இருந்த காலகட்டத்தில் சத்தியமார்க்கம்.காம் இணையதளத்தில் ‘தோழர்கள்’ என்ற தலைப்பில் நபிகள் நாயகம் (ﷺ) அவர்களுடைய தோழர்களின் வாழ்வியல் கட்டுரைகள் வரலாற்றுத் தொடராக வெளி வந்துக்கொண்டிருந்தது. இப்போது போலன்றி அப்போது சமூக ஊடகம் வெளிச்சத்தில் இல்லாத போதும் ‘தோழர்கள்’ தொடர் வாசகர்களிடையே பெரும் வரவேற்புப் பெற்றது. அதற்கு முக்கியக் காரணம் ஆசிரியர் நூருத்தீன் அவர்களின் தனித்துவமான எழுத்து நடை. அமெரிக்காவில் வசித்து வரும் தோழர் நூருத்தீன் அவர்களின் எழுத்தின் மரபு அவருடைய தந்தை மற்றும் பாட்டனாரிடமிருந்து துவங்குகிறது. அவர்களின் தாருல் இஸ்லாம் குழுமம் நூறாண்டு கடந்து, ஆன்மீகப் பாதையில் மூன்று தலைமுறை எழுத்துப் பயணத்தை கடந்து வந்திருப்பது பெரும் சாதனைதான்.
கெட்டி அட்டையுடன், ஆயிரம் பக்கங்களுக்கு மேல், தேர்ந்தெடுக்கப்பட்ட 70 நபித் தோழர்களின் வாழ்க்கை வரலாற்றை முழுத் தொகுப்பாக சீர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
நபிகள் நாயகத்தின் (ﷺ) பிறவி ஒன்றுதான். ஆனால் அதனைப் பல பிரதி எடுத்து தங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பொருத்தி நபியவர்களைப் பிரதிபலிக்கும் மனிதப் புனிதர்களாகத் திகழ்ந்தவர்கள் இந்தத் தோழர்கள். எட்டுத் திக்கையும் திரும்பிப் பார்க்க வைத்த தோழர்கள் வரலாற்றை, அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை –nonlinear வகைமையில் ஒரு சம்பவத்தின் இடையிலிருந்து துவங்கி மீண்டும் அந்த சம்பவத்தில் இணைக்கும்/முடிக்கும்– புதின முறைமை யுக்தியைப் பயன்படுத்தி இந்த நூலில் எழுதி இருப்பது வாசிப்பவருக்கு சுவாரசியத்தை அதிகப்படுத்தும். அதே நேரத்தில் இந்த நூல் வரலாற்று நிழலில் நின்று உரையாடும்.
ஏழாம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களை இதில் விவரித்துள்ளதை வாசிக்கும் போது யுத்த களத்தின் புழுதியை நுகர முடிகிறது; பாலைவன வெப்பத்தையும் குளிர்ச்சியையும் உணர முடிகிறது; வாசிக்கும் போது நம் கபாலத்தில் காட்சியாக விரிகிறது. இந்த நூலில் எழுத்தாளப்பட்டிருக்கும் திரைமொழி மக்களைக் கவரும் என்று உறுதியாக நம்பலாம்.
தோழர்களின் வாழ்க்கையை ஆசிரியர் ஓரிடத்தில் இவ்வாறு வருணிக்கிறார்…
உலகை இச்சையை துறப்பது இறைவனுக்காக; இல்லறம் நடத்துவது இறைவனுக்காக; ஒழுக்கம் பேணுவது இறைவனுக்காக! இதற்கெல்லாம் இங்கேயே கூலி கிடைக்கிறதோ இல்லையோ, சேர்த்து வைத்து பெற்றுக் கொள்வோம் மறுமையில் ஒட்டு மொத்தமாக, என்று ஆகாயம் தாண்டிய லட்சியப புள்ளி அவர்களுடையது. (பக்கம் 116)
எவ்வளவு நிதர்சனமான வார்த்தை; எவ்வளவு ஆதர்சனமான வாழ்க்கை
இதுவரை வந்த நபித் தோழர்களின் புத்தகத்தில் இது புது ரகம்! மொத்தத்தில் இது மலர் மகுடம்!!
ஜஅஃபர் சித்தீக்
நூல்கள் வாங்க:
https://www.commonfolks.in/books/d/thozhargal-muzhu-thoguppu
https://www.commonfolks.in/books/d/thozhiyar-seermai
