தாயிஃபில் நபி (ஸல்) அவர்கள்

by admin
முஹம்மது நபி (ஸல்) வரலாறு கட்டுரைப் போட்டியில்
இரண்டாம் இடம் பெற்ற கட்டுரை

முன்னுரை

நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு நபி (ஸல்) மக்காவிலிருந்து 60 மைல் தொலைவிலுள்ள தாயிஃப் மக்களிடம் இஸ்லாம் பக்கம் அழைக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்கள் அடிமை ஜைது இப்னு ஹாரிஸாவுடன் (ரலி)

கால் நடையாகவே திரும்பினார்கள். வழியிலிருந்த ஒவ்வொரு கூட்டதாருக்கும் இஸ்லாமிய அழைப்பு கொடுக்கப்பட்டும் அக்கூட்டதாரில் எவரும் இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

மூவர் நபி (ஸல்) அவர்களை ஏசினர்

நபி (ஸல்) அவர்கள் தாயிஃபிற்கு சென்றடைந்தபோது அங்கு வசித்து வந்த ஸகீஃப் கூட்டத்தாரின் தலைவர்களும் அமர் இப்னு உமைர் அஸ்ஸகபி என்பவனின் பிள்ளைகளுமான 1. அப்து யாலில், 2. மஸ்ஊது, 3. ஹபீப் என்ற மூன்று சகோதரர்களிடம் சென்றார்கள். அவர்களிடம் இஸ்லாமைப் பரப்புவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரினார்கள்.

அவர்களின் ஒருவன் உன்னை அல்லாஹ் தூதராக அனுப்பியது உண்மையென்றால் நான் கஅபாவின் திரைகளை கிழித்து விடுவேன் என்று கூறினான். மற்றொருவன் அல்லாஹ்வுக்கு உன்னைத் தவிர நபியாக அனுப்ப வேறொருவர் கிடைக்கவில்லையா? என்று கேட்டான்.

மூன்றாமானவன் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் உன்னிடம் ஒருபோதும் பேச மாட்டேன். நீ உண்மையில் தூதராக இருந்தால் உன் பேச்சை மறுப்பது எனக்கு மிக ஆபத்தானதாகும். நீ அல்லாஹ் மீது பொய் கூறுபவராக இருந்தால் உன்னிடம் பேசுவதே எனக்கு தகுதியல்ல என்று கூறினான். அப்போது நபி (ஸல்) அவர்கள் இதுதான் உங்கள் முடிவாக இருந்தால் நம் இந்த சந்திப்பை மக்களுக்கு வெளிப்படுத்தாமல் மறைத்து விடுங்கள் என்று கூறினார்கள்.

பல பிரமுகர்களைச் சந்தித்து இஸ்லாமிய அழைப்பு

நபி (ஸல்) அவர்கள் தாயிஃபில் பத்து நாட்கள் தங்கி அங்குள்ள மற்ற எல்லா தலைவர்கள் பிரமுகர்களைச் சந்தித்து இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். ஆனால் அவர்களில் எவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாததுடன் தங்கள் ஊரை விட்டு உடனடியாக வெளியேறும்படி கூற, நபி (ஸல்) அவர்கள் ஊரை விட்டு வளியே செல்ல முயன்ற போது அவர்களை வம்பர்களும் அடிமைகளும் ஒன்று கூடி ஏசிப் பேசினர்.

இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாகி அவர்கள் அனைவரும் இரு அணிகளாக நின்று கொண்டு நபி (ஸல்) அவர்கள் மீது கற்களை எறிந்தனர். அதிகமான கற்களால் நபி (ஸல்) அவர்களின் பாதணிகளும் இரத்தக் கறைகளாயின.

நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களின் அடிமை ஜைது இப்னு ஹாரிஸா நபியவர்களைக் காப்பதற்காக தங்களையே கேடயமாக்கிக் கொண்டார்கள். அதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தாயிஃபிலிருந்து மூன்று மைல்கள் தொலைவிலுள்ள ரபீஆவுடைய மகன்களான உத்பா, ஷைபா என்ற இருவருக்குச் சொந்தமான தோட்டம் வரை நபி (ஸல்) அவர்களை அடித்துக்கொண்டே வந்தார்கள். நபி (ஸல்) அந்த தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள திராட்சை தோட்ட பந்தலின் நிழிலில் அமர்ந்தார்கள். அப்போதுதான் மிகப் பிரபலமான அந்த பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். நபி (ஸல்) அவர்களின் உள்ளம் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளினால் எவ்வளவு வேதனை அடைந்திருந்தது என்பதையும் தாயிஃப் மக்கள் இஸ்லாமை ஏற்காததனால் எவ்வளவு துக்கத்திற்கு ஆளானார்கள் என்பதையும் இந்த பிரார்த்தனையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனை:

அல்லாஹ்வே! என் ஆற்றல் குறைவையும் என் திறமை குறைவையும் மனிதர்களிடம் நான் மதிப்பின்றி இருப்பதையும் உன்னிடமே முறையிடுகிறேன். கருணையாளர்களிலெல்லாம் மிகப் பெரிய கருணையாளனே! நீதான் எளியோர்களைக் காப்பவன். நீதான் என்னைக் காப்பவன். நீ என்னை யாரிடம் ஒப்படைக்கிறாய்? என்னைக் கண்டு முகம் கடுகடுக்கும் அந்நியனிடமா? அல்லது என் காரியத்தை நீ உரிமையாக்கிக் கொடுத்திருக்கும் பகைவனிடமா? உனக்கு என் மீது கோபம் இல்லையானால் (இந்த கஷ்டங்களையெல்லாம்) நான் பொருட்படுத்தவே மாட்டேன். எனினும் நீ வழங்கும் சுகத்தையே நான் எதிர்பார்க்கிறேன். அதுவே எனக்கு மிக விசாலமானது. உன் திருமுகத்தின் ஒளியினால் இருள்கள் அனைத்தும் பிரகாசம் அடைந்தன. இம்மை மறுமையின் காரியங்கள் சீர் பெற்றன. அத்தகைய உன் திருமுகத்தின் ஒளியின் பொருட்டால் உன் கோபம் என் மீது இறங்குவதிலிருந்தும் அல்லது உன் அதிருப்தி என் மீது இறங்குவதிலிருந்தும் நான் பாதுகாவல் கோருகிறேன். அல்லாஹ்வே! நீயே பொருத்தத்திற்குரியவன்! நீ பொருந்தி கொள்ளும் வரை கோபத்திலிருந்து பாதுகாப்பு தேடுகிறேன். அல்லாஹ்வே! பாவத்திலிருந்து தப்பிப்பதும் நன்மை செய்ய ஆற்றல் பெறுவதும் உன் அருள் இல்லாமல் முடியாது.

நபி(ஸல்) அவர்களை இந்த நிலையில் பார்த்த ரபிஆவின் மகன்களுக்கு இரக்கம் வந்தது. தங்கள் கிறிஸ்துவ அடிமை அத்தாஸை அழைத்து திராட்சைக் குலையை அவருக்கு சென்று கொடு என்று கூறினர். திராட்சைக் குலைகளை அத்தாஸ் நபி (ஸல்) அவர்களுக்கு முன் வைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ் என்று கூறி சாப்பிட்டார்கள்.

அதைக் கண்ட அத்தாஸ் இந்த பேச்சு இவ்வூர் மக்கள் பேசும் பேல்லவே. உங்களுக்கு இது எப்படி தெரியும் என் கேட்டார். அதற்கு உனக்கு எந்த ஊர்? உன் மார்க்கம் என்ன? என்று அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்க அதற்கு அவர் நீனவாவை சேர்ந்த கிரிஸ்தவன் நான் என்றார். நல்லவரான யூனுஸ் இப்னு மத்தாவின் ஊரைச் சேர்ந்தவர் தானே? என்று நபி (ஸல்) அவரிடம் கேட்டதற்கு அவர் ஆச்சரியத்துடன் யூனுஸ் இப்னு மத்தாவைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்? என்றார். அவர் என் சகோதரர்;  அவரும் ஓர் இறைத்தூதர்தான் என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறியவுடன் அத்தாஸ் நபி (ஸல்) அவர்களின் தலை, கை மற்றும் கால்களை முத்தமிட்டார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரபிஆவின் மகன்களில் ஒருவர் மற்றவரிடம் இதோ உன் அடிமையை அவர் குழப்பி விட்டார் என்று கூறினான். அத்தாஸ் திரும்பி வந்தவுடன் உனக்கு என்ன கேடு நேர்ந்தது? என்று அவ்விருவரும் இடித்துரைத்தனர். அதற்கு அத்தாஸ் என் எஜமானர்களே! இவரை விடச் சிறந்த எவரும் இப்பூமியில் இல்லை. இவர் எனக்கு ஒரு விஷயத்தை மிக உறுதியாகக் கூறினார். அதை இறைத்தூதரைத் தவிர வேறெவரும் அறிந்திருக்க முடியாது என்றார். அதற்கு அவ்விருவரும் அத்தாஸே! உனக்கு என்ன கேடு. இவர் உம்மை உமது மார்க்கத்திலிருந்து திருப்பி விடாமல் இருக்கட்டும். உமது மார்க்கம் தான் இவரின் மார்க்கத்தைவிடச் சிறந்தது என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் அந்த தோட்டத்திலிருந்து வெளியேறி மிகவும் கவலையுடன் உள்ளம் உடைந்தவர்களாக மக்கா நோக்கித் திரும்பும் வழியில் கர்னுல் மனாஜில் என்ற இடத்தை அடைந்தபோது அல்லாஹ் அவர்களிடம் ஜிப்ரீலையும் (மலைகளின் வானவர்) மலக்குல் ஜிபாலையும் அனுப்பினான். மலக்குல் ஜிபால் தாயிஃப்வாசிகளாகிய இம்மக்களை இரு மலைகளையும் ஒன்று சேர்த்து நசுக்கி அழித்து விடவா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.

நபி (ஸல்) அவர்களின் பெருந்தன்மை

ஆயிஷா (ரலி) அவர்கள் இச்சம்பவத்தை விரிவாகக் கூறுகிறார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களிடம் உஹத் போரைவிட கடுமையான நாள் எதுவும் உங்கள் வாழ்வில் வந்துள்ளதா? என்று கேட்டேன். அதற்கு உன் கூட்டத்தாரின் மூலம் பல துன்பங்களைச் சந்தித்துள்ளேன். நான் சந்தித்த துன்பங்களில் மிகக் கடுமையானது யவ்முல் அகபா என்ற தினத்தில் ஏற்பட்ட வேதனையே ஆகும். நான் இப்னு யாலிலின் மகனிடம் என்னை அறிமுகப்படுத்தினேன். ஆனால் அவன் என் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் கவலையுடன் திரும்ப மக்காவை நோக்கிப் பயணமாகி கர்னுல் மனாஜில் என்ற பெயருள்ள கர்னு ஸஆலிப் என்ற இடத்தில் வந்து தங்கியபோதே எனக்கு முழுமையான நினைவே திரும்பியது. நான் தலையைத் தூக்கிப் பார்த்தபோது என் தலைக்குமேல் ஒரு மேகம் நிழலிட்டுக் கொண்டிருந்தது. அந்த மேகத்தில் ஜிப்ரீல் இருந்தார். அவர் என்னை அழைத்து நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் உங்கள் கூட்டத்தாரிடம் பேசியதையும் அவர்கள் உங்களுக்குக் கூறிய பதிலையும் கேட்டுக் கொண்டான். இம்மக்கள் விஷயத்தில் நீங்கள் விரும்பியதை மலக்குல் ஜிபாலுக்கு ஏவ வேண்டும் என்பதற்காக அவரை உங்களிடம் அனுப்பி இருக்கிறான் என்று கூறினார். மலக்குல் ஜிபால் என்னை அழைத்து சலாம் கூறி, ‘முஹம்மதே! ஜிப்ரீல் கூறியவாறே அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளான். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? நீங்கள் விரும்பினால் இவர்களை இரண்டு மலைகளையும் கொண்டு நசுக்கி விடுகிறேன்’ என்று கூறினார். அதற்கு அதை ஒருக்காலும் நான் விரும்பமாட்டேன். மாறாக அவர்களிலிருந்து அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு இணை வைக்காதவர்களை அவன் உருவாக்குவான் என்று நான் ஆதரவு வைக்கிறேன் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

ஜின்களைப் பற்றி குர்ஆனில் இரண்டு இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்

(நபியே!) இந்த குர்ஆனை கேட்கும் பொருட்டு, ஜின்களில் சிலரை நாம் உங்களிடம் வருமாறு செய்து அவர்கள் வந்த சமயத்தில் (அவர்கள் தங்கள் மக்களை) நோக்கி நீங்கள் வாய்பொத்தி (இதனை கேட்டுக்கொண்டு) இருங்கள் என்று கூறினார்கள். (இது) ஓதி முடிவு பெறவே, தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர். (அவர்களை நோக்கி எங்கள் இனத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். இது மூஸாவுக்கு பின்னர் அருளப்பட்டிருக்கின்றது. அது தனக்கு முன்னுள்ள வேதங்களையும் உண்மைப்படுத்துகிறது. அது சத்தியத்திலும் நேரான வழியிலும் செலுத்துகிறது. எங்கள் இனத்தாரே அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்கு பதில் கூறி அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் பாவங்களை (அல்லாஹ்) மன்னித்தும் விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான். (அல் குர்ஆன் 46 : 29-31)

(நபியே) நீங்கள் கூறுங்கள் வஹியின் மூலம் எனக்கு அறிவிக்ககப்பட்டுள்ளது. நிச்சயமாக ஜின்களில் சிலர் (வேதத்தை) செவியுற்றுத் (தங்கள்) இனத்தார்களிடம் சென்று அவர்களை நோக்கி நிச்சயமாக, நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனை செவியுற்றோம்: அது நேரான வழியை அறிவிக்கிறது. ஆகவே, அதனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இனி) நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் இணையாக்க மாட்டோம். (அல்குர்ஆன் 72 : 1-2)

ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்த குர்ஆனைக் கேட்டு சென்றன. இதனை இந்த வசனங்கள் மூலம் அல்லாஹ் அறிவித்த பிறகுதான் நபி (ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள். அதற்கு முன்பு இது அவர்களுக்குத் தெரியாது இதுதான் ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்த முதல் முறையாகும் என்பது நமக்குத் தெரிய வருகிறது.

முடிவுரை

இது உண்மையில் அல்லாஹ்வின் மறைவான பொக்கிஷத்திலிருந்து அருளப்பட்ட மகத்தான உதவியாகும். தன்னைத் தவிர வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாது. அவனுடைய படையைக் கொண்டு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு உதவி செய்தான். மேலும் இது தொடர்பாக இறங்கிய வசனங்களில் நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி வெற்றியடையும் என்ற நற்செய்திகளும் இருந்தன. இப்பிரபஞ்சத்தின் எந்தவொரு சக்தியும் அவர்களின் அழைப்புப் பணி வெற்றயடைவதைத் தடுத்திட முடியாது.

– A. இர்பான் பேகம், அல்மஹா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி

Related Articles

Leave a Comment