மீண்டும் நூருத்தீன்

by admin

அன்பு நூருத்தீன்,

சசி 2.0 என்ற உன் கட்டுரையைப் படித்தவுடன் சடுதியில் தோன்றிய எண்ணங்களை எழுதி அனுப்பியுள்ளேன். முதலில் இதைப் பதிவு செய்த பின் மற்றவற்றைத் தொடர்வேன்.

“என் பால்ய காலத்தை மீண்டும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்ததற்கு நன்றி. குட்டியாக ஒரு time travel செய்த அனுபவம் நேர்ந்தது. விடுபட்ட சில துல்லியமான நினைவுகளை உன் பதிவு மூலம் மீட்கப் பெற்றேன் என்றால் அது மிகையாகாது.”

சசி 2.0 என்ற பதிவுக்கு என்னுடைய பதில் பதிவின் சரியான தலைப்பு இதுவாகத்தான் இருக்க முடியும். “மீண்டும் நூருத்தீன்”. அந்தக் கட்டுரை என் நினைவுகளை என் பள்ளி பருவத்தின் நாட்களுக்குக் கடத்திச் சென்று விட்டது என்பதுதான் உண்மை. என்னை முதலில் எப்போது சந்தித்தோம் என்ற கேள்வி உனக்குத் தொக்கி நிற்பதைப் போல எனக்கு உன்னுடனான நட்பு எப்படி எப்போது தடம் மாறியது என்ற கேள்வி எப்போதும் என் மனதில் இழையோடுவதுண்டு.

நம் நட்பு வளர்ந்தது உன் வீட்டின் மாடிக்குச் செல்லும் குறுகலான படிக்கட்டுகளில். தோளோடு தோள் இடித்து அமர்ந்தபடி, யாரேனும் வரும் போதெல்லாம் எழுந்து வழி விட்டு, மணிக்கணக்கில் தொடரும் நம் சம்பாஷணைகள், விவாதங்கள், விமர்சனங்கள்… பிரமிப்புகள் அவை. வீட்டிற்க்கு விரைந்து செல்ல அவசியம் அற்ற, தொலைக்காட்சி இல்லாத அந்தக் கால கட்டத்தின் பலனாக, அந்தப் படிக்கட்டுகளில் நமது நட்பும் இலக்கியப் பயணமும் தொடர்ந்தது.

சிறுவர் பத்திரிக்கையான ‘முயல்’ படிக்க ஆரம்பித்து, ஞாயிற்றுக்கிழமை வரும் பத்திரிக்கையை நான் சனிக்கிழமையே பத்திரிக்கையின் அச்சகம் சென்று வாங்கி வர, நீ ஆர்வம் அதிகமாகி மூன்று கால் பாய்ச்சலில் ஓடி வெள்ளிக்கிழமையே பதிப்பகம் சென்று ‘முயல்’ வாங்கி வந்து என்னிடம் காட்டிப் பெருமிதம் கொள்வாய். இப்படியாகத் தொடர்ந்த நம் புத்தக ஆர்வம் முயல் பத்திரிக்கையில் கதை எழுதும் அளவுக்கு மாறி விட்டது. அதற்குப் பின்னர் நாம் படிக்க ஆரம்பித்த புத்தகங்கள் எல்லாம் அந்தக் காலக் கட்டத்தில் நமது வயதுக்கு மீறியவை என்பதே நிஜம். சுஜாதா, சாண்டில்யன், அகிலன் என்று நம் வாசிப்பு ஆர்வம் பெருகி விசாலமானது.

இன்றும் என் மனதில் நெகிழ்ச்சியோடு நான் நினைவுறுவது உன் தந்தை தமிழ் சொற்கள் குறித்த சந்தேகங்களை மென்மையாக விளக்கும் பாங்கும் அவரது புன்முறுவல் தவழும் முகமும். பிறகு கல்லூரிக் காலத்தில் நான் வீடு மாறிச் சென்றபின் நம் நட்பில் இடைவெளி ஏற்பட்டதென்று தோன்றுகிறது. முக நூல், மின்னஞ்சல், கணினி, இணையம் போன்ற எதுவும் இல்லாமால் இருந்த காலத்தில் நமது நட்புக்கு இடையே இருந்த பாலம் நமது வாசிப்பு ஆர்வம் மட்டுமே.

அதே ஆர்வம் இன்றும் நம் இருவருக்கும் தொடர்கிறது என்ற அந்த ஒற்றை இழைக் காரணி, ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கழித்து நம்மை மீண்டும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. உன்னை நான் கண்டுபிடித்தது தற்செயலான சம்பவம் என்று தோன்றவில்லை. கண்டிப்பாக இல்லை. உள்ளார்ந்த எண்ண அலைகளுக்கு ஒரு வலிமை உண்டு என்ற சித்தாந்தம் உண்மை என்றே தோன்றுகிறது. அவ்வப்போது, நூருத்தீன் என்ற பெயரை நான் இணையம் மற்றும் முக நூலில் தேடுவது உண்டு. சமீபத்தில் ஓர் இரவில் இணையத்தில் எதேச்சையாக என் விரல்கள் இடறி கணினி திரையில் வந்து விழுந்த புத்தகத்தின் பெயர் “அவ்வப்போது நூருத்தீன் “. அது என் நூருத்தீன் தானா என்று உறுதி செய்ய மானசீகமாக அந்தத் தாடியை எடுத்து விட்டு யோசிக்க வேண்டியிருந்தது.. இன்னும் அந்தத் தாடிக்குள்ளே அதே குழந்தை முகம்.

இளம் பிராயத்தில் சுஜாதா நாவல்களை ரசித்து வாசித்த நூருத்தீனுக்கு அந்த எழுத்து நடை கை வந்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை. “அவ்வப்போது” கட்டுரை தொகுப்பை வாசித்தேன். அவற்றில் எழுத்து நடை, பொருள், நேர்மை மூன்றும் (style, content and genuineness – தமிழாக்கம் சரி தானா?) சரியாகப் பொதிந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உன் கட்டுரைகளின் முடிவில் சிறுகதைகளில் கொண்டு வரும் முடிவைப் போன்ற சுரீர் என்ற தாக்கம் ஏற்படுத்துவது நல்ல உத்தி அல்லது யுக்தி (punch என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகராக வேறொன்றும் எனக்கு உடன் பிடி படவில்லை).

உன் எழுத்துக்கு பாஸ் மார்க் கிடைக்குமா என்ற கவலைக்கு உன்னுடைய நண்பர் என்னிடமிருந்து ஃபர்ஸ்ட் கிளாசே கிடைக்கும் என்று பதில் தந்திருந்தார். அதற்கு மேல் distinction (தமிழில் என்ன?) என்று ஒரு வார்த்தை உண்டு என்று நினைவுப்படுத்துகிறேன்..

முகநூலில் தொடரும் ஆயிரக்கணக்கான நட்புகள் இருபது ஆண்டுகள் விட்டு மீண்டும் தொடரக்கூடுமா, சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் தோளோடு தோள் இணைத்து நடந்த… கைகள் கோர்த்தபடி ஓடிய… நட்புகள் நெஞ்சை விட்டு அகல்வதில்லை என்பதுதான் நிதர்சனம்.

அன்புடன்,
சசி

Related Articles

Leave a Comment