பிரிவு 1: இஸ்லாத்தின் மூலக் கொள்கைகள்

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

அருளாளனும் அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திருநாமத்தை(த் துணை)க் கொண்டு.

الٓمٓ

1. அலிப்; லாம்; மீம்.10


ذَٰلِكَ ٱلْكِتَـٰبُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ

2. இந்தக்11 கிரந்தம்,12 – இதில் ஐயம் (அணுத்துணையும்) இல்லை, –தின்மையை விட்டுத் தங்களைத் தற்காத்துக் கொள்ளுகின்றவர்களுக்கு13 நேர்வழி(காட்டி)யாக14 இருக்கிறது.


ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِٱلْغَيْبِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقْنَـٰهُمْ يُنفِقُونَ

3. அவர்கள் மறைவானதன் மீது15 ஈமான்கொண்டும், தொழுகையை16 நியமமாய் நிலைநிறுத்தியும், அவர்களுக்கு (அல்லாஹ்வாகிய) நாம் அருளியுள்ளதி னின்று (அதிகம் தருமச்) செலவு செய்தும் வருபவர்கள்;17


وَٱلَّذِينَ يُؤْمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيْكَ وَمَآ أُنزِلَ مِن قَبْلِكَ وَبِٱلْـَٔاخِرَةِ هُمْ يُوقِنُونَ

4. (ஏ நபீ!) இன்னம், அன்னவர்கள் நும்பால் அருளப்பட்டதன் மீதும், நுமக்கு முன்னே அருளப்பட்டதன் மீதும்18 ஈமான் கொள்பவர்கள்; (இன்னம்) இறுதி (வாழ்க்கை)யின் மீதும்19 அன்னவர்கள் உறுதி பூணுகிறார்கள்.


أُو۟لَـٰٓئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ

5. இவர்களே தங்கள் ரக்ஷகன்பாலிருந்து வந்துள்ள நேர் வழியிலே இருக்கிறார்கள்; இவர்களேதாம் ஜெயசீலர்களும்20 ஆவார்கள்.


إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ سَوَآءٌ عَلَيْهِمْ ءَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ

6. நிச்சயமாக், நிராகரித்து நிற்பவர்கள், – அன்னவர்களை (ஏ நபீ!) நீர் அச்சமூட்டி எச்சரித்த போதினும், அல்லது நீர் அவர்களை எச்சரியாது விட்ட போதினும், அஃது (இரண்டும்) அவர்களுக்குச் சரி(சரி)யாயிருக்கும் காரணத்தால் – அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.21


خَتَمَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ وَعَلَىٰٓ أَبْصَـٰرِهِمْ غِشَـٰوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ

7. அல்லாஹ் அன்னவர்களுடைய இருதயங்கள் மீதும் அவர்களுடைய செவி(ப் புலன்)மீதும் முத்திரை யிட்டும் விட்டான். இன்னம், அன்னவர்களின் நேத்திரங்கள் மீதும் திரையொன்று ஏற்பட்டிருக்கிறது; (ஆகவே) அவர்களுக்கு மகத்தான வேதனையும் உண்டு.


10. இந்த அத்தியாயத்திலும், மற்றும் 28 வேறு பல அத்தியாயங்களிலும் இம்மாதிரி ஒரு சில எழுத்துக்களுடன் திருவாக்கியங்கள் தொடங்குகின்றன. இங்கே மூன்றெழுத்துக்கள் உள்ளன. 19-ஆம் அத்தியாயத்தில் ஐந்தெழுத்துக்கள் உள்ளன. ஒவ்வோர் எழுத்தையும் தனித்தனியே பிரித்துப் படிக்க வேண்டுமன்றி. சேர்த்து உச்சரித்துவிடக் கூடாது. இம்மாதிரியாக ஒரு சூறாவின் ஆரம்பத்தில் அமைந்துள்ள அரப் அக்ஷரங்கள் (42-ஆவது அத்தியாயத்தின் ஆரம்ப ஆயத்தும் அடுத்த ஆயத்தும் அக்ஷரங்களுடனே அமைந்திருப்பதைக் கவனியுங்கள்) ‘ஹுரூ’பெ மு:கத்த ஆ’த்–(தனித்தனியே ஓதப்பட வேண்டிய எழுத்துக்கள்) என்று அழைக்கப் படுகின்றன. இவ்வெழுத்துக்களுக்கு இன்ன கருத்தைத்தான் வழங்க வேண்டும் என்று ஏகோபித்த அபிப்பிராயம் நிலவவில்லை யாகையால், இவற்றுக்குப் பொருள் வரையாமல், உச்சரிப்பின்படியே நாம் எழுதிக் காட்டி வருவோம். இங்கே அலிப், லாம், மீம் என்னும் எழுத்துக்கள், மூன்று அரப் வார்த்தைகளான அன, அல்லாஹ், அஃலம் என்னும் சொற்களிலிருந்து முறையே முதல் இடை கடை அக்ஷரங்களாக எடுக்கப்பட்டுள்ளன வென்றும், இச்சொற்றொடருக்கு “நானே அல்லாஹ். எல்லாம் அறிந்தவன்” என்பது பொருளாகுமென்றும் இப்னு அப்பாஸ் (றலி) இயம்பியுள்ளார்கள். இவ்வாறாக இத்திருமறை, தான் எல்லாம் வல்ல அல்லாஹ்வினாலே அருளப்பட்டுள்ளதெனத் தன்னறிவிப்புக் கூறுகிறது. எல்லா விஞ்ஞானமும், எல்லாத் தர்க்கவாத சாஸ்திரங்களும் இறைவனொருவன் இருக்கத்தான் வேண்டுமெனக் குறிப்பாகக் காட்டு மல்லது, இறைவன் இருக்கிறான் எனறு நேரே நிரூபித்துக் காட்டமாட்டா. இக்காரணத்தினாலேதான் பற்பல விஞ்ஞானிகளும் தர்க்கவாத சாஸ்திரிகளும் நாத்திகர்களா யிருக்கிறார்கள். எனவேதான், இத்திருமறையின் தொடக்கத்திலேயே இறைவன், “நானே அல்லாஹ். எல்லாம் அறிந்தவன்; அப்படிப்பட்ட நானேதான் இவ்வேதத்தின் கிரந்தகர்த்தா” என்று கூறுகிறான். எனினும், அல்லாஹ்வும் அவனுடைய றஸூலுமே இந்தத் தனி எழுத்துக்களின் சரியான தாத்பரியத்தை உணர்ந்துளார்கள். அயல் மதவாதிகள் சிலர் குறும்புத்தனமான முறையில் இந்த எழுத்துக்களுக்கு வியாக்கியானம் வரைவதுண்டு : ஆரம்ப காலத்தில் குர்ஆனை ஏட்டில் எழுதி வைத்த இலேக்கர்கள்–(எழுத்தாளர்கள்) தத்தம் கைப்பட வரைந்த அத்தியாயத்தகளின் முகப்பில் இவ்வாறு தங்கள் பெயரின் விலாச எழுத்துக்களைப் பொறித்து விட்டிருக்கிறார்கள் என்றும், இந்த எழுத்துக்கள் குர்ஆன் வாசகத்தைச் சேராதவை என்றும் அவர்கள் குதர்க்கம் புரிவதுண்டு. ஏனென்றால், இந்தக் காலத்தில் கட்டுரை வரைபவர்கள், சித்திரம் தீட்டுவோர், அசல் நூல்களைப் பிரதி செய்வோர் தங்கள் முழுப்பெயரை அல்லது பெயரின் முதலெழுத்துக்களை அவற்றில் பொறிக்கிறார்களல்லவா? இதைப் பார்த்துவிட்டு, குர்ஆனுக்கும் அப்படி இருந்திருக்கும்போலுமென்று அவர்கள் தாமாகவே கற்பித்து விட்டிருக்கின்றார்கள். ஆனால், வஹீயின் ஆரம்ப காலத்திலேயே மக்காவில் 19, 20- ஆவது அத்தியாயங்கள் வெளியாகி, அப்பொழுதே அவை “ஹுரூபெ முகத்தஆத்”தாக ஒப்பிக்கப்பட்டு வந்திருக்கின்றமையால், பிரதி செய்தவர்கள் தங்கள் விலாச எழுத்துக்களை இவ்வாறு பொறித்தார்கள் என்று மாற்றார் உரைப்பதை நாம் ஒதுக்கித் தள்ளுவோம். நபிபிரான் (சல்) குர் ஆன் ஓதும் பொழுதே அந்த எழுத்துக்களை உச்சரித்தே ஓதினார்கள் என்பதற்கு நிரம்ப ஆதாரங்கள் இருப்பதால் எதிரிகள் திரித்து விடும் கயிற்றை நாம் புறக்கணித்தே தீரவேண்டும். மொத்தம் 29 அத்தியாயங்களின் தொடக்கத்தில் இப்படிப்பட்ட குறிப்பெழுத்துக்கள் உண்டென்று முன்னே சொன்னோம். அவற்றுள் இந்த அத்தியாயம், 3, 29, 30, 31, 32 ஆகிய ஆறு அத்தியாயங்களிலேதாம் அலிப் லாம் மீம் என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மற்றவற்றுக்குரிய குறிப்பெழுத்துக்கள் அங்கங்கே விமர்சனம் புரியப்பெறும். இங்குள்ள இம்மூன்று எழுத்துக்களையும் அலிப் லாஅம் மீஇம் என்று அளபெடுத்து உச்சரித்தல் அவசியமாம்.

11. அண்மையி லுள்ளதைச் சுட்டிக்காட்ட ஹா’தா என்னும் சொல்லும், சேய்மையி லுள்ளதைக் குறித்துக் காட்ட ‘தாலி(க்)க என்னும் சொல்லும் அரப் மரபுப்படி குர்ஆனில் வழங்கப்பட்டு வருவதா யிருப்பினும், “இந்த வேதம்” என்று பொருள் பயக்கும் இவ்விடத்தில், 17:9-இல் உள்ளதுபோல, “ஹாதா” என்று வழங்காமல், “தாலி(க்)க” என்று வழங்கியிருக்கும் காரணத்தை ஊன்றிக் கவனித்தல் வேண்டும். குர்ஆன் இப்புவியிடைத் தோன்றுவதற்கு முன் இறைவனால் இறக்கப்பட்ட பண்டை வேதங்கள் இவ்வாறு ஓர் இறுதி வேதம் வரத்தான் போகிற தென்பதைச் சுட்டிக் காட்டிக் கொண்டே யிருந்தன. இறுதி நபி அவதரிப்பார் என்றும், அவர் இந்த இறுதி வேதத்தைப் பெற்று மக்களிடை விட்டுச் செல்வார் என்றும், இறைவன் முந்திய கிக்தாபுகளில்–(வேதங்களில்) வாக்களித்திருந்தானே, அந்த வாக்கு இப்பொழுது நிறைவேற்றப் பட்டுவிட்ட தென்பதை எதஹூதிகளுக்கும் நசாராக்களுக்கும் காபிர்களுக்கும் நன்கெடுத்துக் காட்டுதற்காக “இந்த” என்னும் அண்மைச் சுட்டைப் பொருத்தாமல் “(முன்பு வாக்களிக்கப்பட்ட) அந்த வேதம்” என்னும் கருத்தை யுள்ளடக்கி, மாந்தர் மிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அதுவே இதுவாகும் என்பதை இவ்வாறு அழகுற அமைத்துளான் அவன். அன்றியும், வேறு சில வியாக்கியானிகள், அண்மையிலுள்ள கண்ணியமும் கௌரவமும் பொருந்திய ஒரு பொருளை தாலிக்க என்றே மரியாதை கலந்த கட்டுடன் குறிப்பிடுவது அரபுமொழி இலக்கண மரபென்று கூறுவதால், “அந்த” என்னும் பொருளைப் பயக்காமல் “இந்த” என்னும் பொருளே இங்குக் குறிக்கப்படுகிற தென்றும் கூறலாம்.

12. எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட காகிதங்கள் அனைத்தும் ஒருங்கு திரட்டப்பட்டு ஒரு நூலுருவாக அல்லது பெரிய புத்தக வடிவாக அமையும்போது அது “கி(த்)தாப்” என்று சொல்லப்படும். க(த்)தப’ எழுதினான்: கா(த்)திப் எழுதுபவன், கி(த்)தாப்-கிரந்தம் (புத்தகம், கடிதம், நூல்). இறைவ னிறக்கிய வேதங்கள் யாவுமே பொதுவாகக் “கித்தாப்” என்றே ஒருமையாக அல்லது “குத்துப்” என்று பன்மையாக அழைக்கப்பட்ட போதினும், அல் கித்தாப் என்னும் சிறப்புச் சொல், குர்ஆனுக்குரிய பிறிதரு நாமம் என்பதை நினைவில் இருத்து வீர்களாக. வேதபுத்தக மொன்று பூர்த்தியான அளவில் சம்பூர்ணமாக நபிபிரானுக்கு இறக்கப்பட்ட தென்பதில் ஐயங்கொள்ளும் எதிர்மதவாதிகள் அம்மஹான் (சல்) ஏதேதோ மனம்போன போக்கில் உபதேசித்தாரென்றும், அவை இறைவனின் வசனங்களல்ல வென்றும்–துண்டு துண்டாக–ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல், அவ்வப்போது தமக்குப் பட்டதை அவர் சொன்னாரென்றும் கற்பித்து விடுகின்றனர். அத்தகைய இஸ்லாத்தின் எதிரிகளுக்கு ஒரு பக்கா அறைகூவலாக அமைந்துவிட்டிருக்கிறது இச்சொல். சம்பூர்ணத்தைப் பெற்றுக்கொண்ட கிரந்தம் – வேதம் – தானென்று குர்ஆன் தன்னை ஆரம்பத்திலேயே வாசகர்களுக்கு அறிவித்துக் கொடுக்கிறது. துண்டு துண்டான உபதேசங்களோ, அல்லது வெற்றுத் தொடரான வெறு நீதி வாக்கியங்களோ அல்ல குர் ஆன்; ஆனால், இறைவனாலே தொகுக்கப்பட்டு, சிறுகச் சிறுக வஹீவாயிலாக நபிபிரானுக்கு இறக்கி வைக்கப்பட்ட முழுக் கித்தாப் இது என்பதை உறுதிப் படுத்தவே, “இதோ குர் ஆன்!” என்று பாராக்குக் கூறி வெளிப்படாமல், “முன்பெல்லாம் வாக்களிக்கப்பட்டு வந்ததே அந்தப் பூர்த்தியான முழு வேத நூல் இது!” என்று மேகத்தினிடை யிருந்து வெளிப்படும் பரிதியேபோல் சுடர்வீசி முன்வந்து நிற்கிறது இவ்வேதம். மேலும், குர்ஆன் ஆரம்ப முதலே வரைந்து பத்திரப்படுத்தப்பட்டு வந்த ஒரு முழு நூலாக இருந்ததன்றி, குற்றங் கற்பிக்கிற விமரிசகர்கள் சிலர் தவறாக உரைப்பதேபோல் நபிபிரானுக்குப் பின்னர்ச் சில ஆண்டுகள் கழித்துத் திரட்டப் பட்ட கோவைப் பிரபந்தமன்று இவ்வேதம் என்பதை இந்த ‘அல் கித்தாப்’ என்னும் காரணப் பெயர் நன்கு விளக்கிவிட் டிருக்கிறது. இறைவன் நாட்டத்தில் இத்திருமறை ஆதியிலிருந்தே ஒழுங்காகத் தொகுக்கப் பட்டிருந்த தென்பதையும் இந்த நாமம் விளக்கி வைக்கிறது. குர்ஆன் கையெழுத்துப் பிரதிகளா லான கித்தாபாகவும், மனப்பாடமாக நெட்டுருச் செய்யப்பட்ட சாசுவத சாசனமாகவுமே அன்று முதல் இன்றளவும் நின்று விளங்குகிறது. மேலே தோற்றுவாயில் குறிப்பிட்டவாறு, இப்புவியிடை நிலவும் அனைத்து மறைகளுள்ளும் இவ்வொரு வேத நூல் மட்டுமே எடுத்த எடுப்பில் தான் யாரென்பதைத் திட்டவட்டமாக அறிமுகப்படுத்திக் கொண்டு, பீடுகெழு பெருமையுடன் நடை போட்டுத் துவங்குகின்றது.

13. த:க்வா – (இறைவனிடத்து அச்சப்பாடு – 74:56) உடையவர் முத்த:கீ என்று அழைக்கப்படுவார்; அல்லது பய பக்தியுடன் இருப்பவர்” என்றும் பொருளுரைக்கலாம். ஆனாலும், “முத்தக்கீ” என்னும் சொல்லின் மூலவினைச் சொல்லாகிய இத்த:கா என்றால், “அவன் தன்னை மிக நன்றாகத் தற்காத்துக் கொண்டான்” என்று பொருள்படுமாகையால், முத்தக்கீ என்பவன் பாபத்தினின்றும், மறுவுலகில் தன்னைப் பாதிக்கக்கூடிய தீமைகளினின்றும் தன்னை மிக நன்றாகத் தற்காத்துக் கொள்ளுகிறவன் என்று சொல்லலாம். எவனொருவன் பாபங் களைந்து, நற்செயல் புரிந்து தன்னை உத்தமனாக்கிக் கொள்ள வேண்டிய தற்காப்புக் கேடயங்களைச் செப்பஞ் செய்துகொள்கிறானோ, அவனுக்கே இவ்வேதம் நேர்வழிகாட்டியா யிருக்கும் என்பது கண்கூடு (7:26 பார்க்க). அவ்வாறாய பாபமேனும், தின்மையேனும் வந்தணுகாமல் தன் கடமையில் சர்வ ஜாக்கிரதையுடன் ஒழுகிக் கொள்வதையும் தக்வா என்னுஞ் சொல் விவரிக்கிறது. முன்பெல்லாம் வேதங்கள் அருளப்பட்டு, வழிதவறி நடந்து, தங்களையும் பாவிகளாக்கிக்கொண்டு, தங்களுக்கு அருளப்பட்ட வேதங்களையும் வீணாக்கிக் கொண்டார்களே, அவர்களை நினைவு படுத்துகிறது இத் திருவாக்கியம். முத்தக்கீன்களுக்கு மட்டுமே இது ஹுதாவாக – (வழிகாட்டியாக) விளங்கும். பெயரளவில் தம்மை முஸ்லிமென்று அழைத்துக் கொண்டு நிரீசுவரவாதம் புரிகின்ற, நாத்திகம் பேசுகின்ற அப்படிப்பட்ட போலி மனிதர்களுக்கு இது நேர்வழி காட்ட மாட்டாது. நேர் வழியைப் பெற்றுக் கொள்ள ஒருவன் அனைத்து யோக்கியதைகளையும் அடைந்திருத்தல் வேண்டும்; அவனுக்கே நற்பலனும் நன்மார்க்கமும் கிட்டும். அப்படிப்பட்ட முத்தக்கீ எந்த எந்த இலக்ஷணங்களுடன் கூடியவனா யிருப்பான் என்பது அடுத்து விவரிக்கப்படுகிறது. இவ்வுலகில் உத்தமராய் வாழ்பவருக்கே அவ்வுலகில் ஆத்மிக அருஞ்சுவனம் கிட்டுதற்கு இவ்வேதம் நேர்வழி காட்டியா யிலங்குமென்பது கருத்து. (முழுவிளக்கம் அ.கு. 2707- இல் காண்க)

14. சென்ற அத்தியாயத்தில் நாம், நேரான பாதையில் நம்மை நடாத்தி வைக்குமாறு இறைவனிடத்து இறைஞ்சுதல் புரிந்தோம். இதற்கு விடையில் அவ் இறைவன் ஹுதன் லில் முத்தகீன் –தின்மையை விட்டுத் தங்களைத் தற்காத்துக் கொள்கிறவர்களுக்கு இந்தக் கிரந்தம் நேர்வழிகாட்டியாக இருக்கிறதென இயம்பியுள்ளான்; 47:17ம் பார்க்க.

15. மறைவானது என்பது வானவர்களாய அமரர்களையும் குறிக்கும். இவர்களைப்பற்றிப் பின் வரும் ஆயத் 177-இன் கீழே நோக்க. இக்காலத்தில், “கண்ணுக்குப் புலப்படுவதை மட்டுமே நான் நம்புவேன்; கட் புலனாகாத ஒன்றை நம்பமாட்டேன்!” என்று பல நாத்திகர்கள் இடையறாது கதறி வருகிறார்கள். ஆனால், தின்மையை விட்டுத் தங்களைத் தற்காத்துக் கொள்பவர்கள், மாந்தரின் சாதாரண ஐம்புல நுகர்ச்சிக்கும் அப்பாற்பட்ட (அல் :கய்ப்) திட்ப நுட்ப விஷயங்களையும் மனமார ஏற்றுக் கொள்வார்கள் என்பது கருத்து. அல்லாஹ்வை எந்தப் புறக்கண்ணாலும் காணவோ, எந்தப் புறக்காதாலும் கேட்கவோ முடியாது. கட்புலனாகாது மறைந்து நிற்பது ‘கய்ப்’. நிரீசுவரவாதம் பேசுகிற விஞ்ஞானி யொருவன் தான் இறைவனைக் கண்டதேயில்லை யாகையால் அவன்மீது எப்படி நம்பிக்கை வைக்கமுடியும்? என்று வினவுகிறான். ஆனால், அவன் ஆராய்ச்சி செய்கிற சகல ரசாயன சாஸ்திரமும் விஞ்ஞானமும் எப்படிப்பட்ட கண்ணுக்கும் மாபெரும் பூதக் கண்ணாடிக்கும் கூடக் கிஞ்சித்தும் புலனே ஆகாத அணுவை (Atom) ஜீவநாடியாகக் கொண்டுள்ளன என்பதை அடிப்படையாக வைத்தும், அந்த அணுவின்மீதும் அதன் சக்தியின் மீதும் பூரண நம்பிக்கை வைத்துமே தன் சித்தாந்தங்களை மாபெருங் கட்டிடமாக நிர்மாணிக்கிறான். இங்ஙனமாகக் கட்புலனாகாத (கய்பான) அணுவின் மீது நம்பிக்கை கொண்டேதான் அவன் விஞ்ஞானத்தை வெல்கிறான்; ஆனால், அதே மாதிரி கட்புலனாகாத அல்லாஹ்வையும், அவனுடைய அமரர்களையும் கொஞ்சமும் நம்ப முயலாமல் தனது உள்ளத்தைப் பாழ்படுத்திக் கொள்கிறான். விஞ்ஞானத்தை வளர்க்க முற்படுகிறவன் எப்படிக் கட்புலனாகா அணுவின்மீது நம்பிக்கை வைத்து அத்துறையில் வெற்றி பெறுகிறானோ. அவ்வாறே ஆத்மிகத்தை வளர்க்க முற்படுகிற தக்வாவுடையவன் ஐம்புலனுக்கும் அப்பாற்பட்ட அல்லாஹ்வின்மீதும் அவனுடைய அமரர்கள் மீதும் முதற்கண் ஈமான்–(நம்பிக்கை) கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடற்பாலது. இறைவன் புறக் கண்ணுக்குப் புலப்படாது மறைவா யிருப்பவன். அவன்மீது நம்பிக்கை வைப்பது அடிப்படை என்பது இங்கே ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

16. மறைவாக எங்கும் வியாபித்து நிற்கும் அல்லாஹ்வின்மீது நன்னம்பிக்கை வைத்தவன் அடுத்தபடியாக அக்கணமே செய்ய வேண்டிய கடமை சலாத் என்று இங்கே குறிக்கப்படுகிறது. இச் சொல்லுக்குத் “தொழுகை” அல்லது “பிரார்த்தனை” அல்லது “வேண்டுகோள்” என்பது பொருள். கண்ட நேரத்தில் கணக்கு வழக்கில்லாமல், அல்லது இஷ்டப்பட்ட நேரத்தில் ஏற்றும், மற்ற நேரத்தில் விட்டும் மாறு செய்யாமல், குறித்த நேரத்தில் குறித்த கணக்கின்படி நியமநியதியுடனும் நேர்மையான நெறியுடனும் தொழுகை நிறைவேற்றப்படுதல் அவசியமென்பதை வலியுறுத்துகிறது இந்தச் சொல். இறைவனை மனமார ஏற்றுக கொள்வதே போதும்; அவ்வாறு ஏற்றுக்கொண்டதற்கு அறிகுறியாக எப்பொழுதாவது அவனை வணங்கித் துதித்தால் போதும் என்பதன்று இஸ்லாம். ஆனால், நியமமாக அந்தக் கடமையைக் குறித்த நேரத்தில் நிறைவேற்றுதல் ஒருவற்குக் கடனாம். 4:103 நோக்க.

17. இறைவன் மீது முதலில் நம்பிக்கை வைத்து அதன் தொடர்ச்சியாக அவனை வணங்கி வழிபட்டு. மூன்றாவதாக அவனளித்துள்ளதி லிருந்து செலவு செய்து தான தர்மம் வழங்க வேண்டும் என்பது வரிசைக் கிரமமாக இங்கே அமைந்திருக்கும் நேர்த்தியை நோட்டமிடுங்கள். “எனது சுய முயற்சியாலும் எனது சொந்த சாமர்த்தியத்தாலும், எனது முன் யோசனையாலும். எனது சதுரப்பாட்டுத் திறமையாலுமே இவ்வளவு சொத்தையும் சேகரித்தேன்!” என்று இறைவனை மறந்து தம்மைத் தாமே மெச்சிப் புகழ்ந்து தற்பெருமையடித்துக் கொள்பவரின் மண்டைமீது ஓங்கியடிக்கிறது இந்த இறை வாக்கியம். ஒரு மனிதன் எதைத் திரட்டினாலும், அது மறைவான இறைவனருளிய பாக்கியமே யன்றி வேறன்று. இவ் வுண்மையை யறிந்த முத்தக்கீயானவன் இறைவனளித்த நிதிக்குவியலை இறைவன் பொருட்டாகவே தானதர்மம் செய்வான், தத்தம் செய்வான், தியாகம் பண்ணுவான். ஆனால், எவனொருவன் தான் சம்பாத்தியம் பண்ணியது தன்னுடையதென்று உரிமை பாராட்டுகிறானோ. அவன் தானும் உண்ணான், பிறர்க்கும் ஈயான், தானம் கொடான், தர்மம் புரியான், பூமியில் புதைத்து வைத்துத் தானும் புதையுண்டு போவான். எனவே இறைவன் மீது அசையாத உறுதி வைத்தவன் அவ்விறைவன் தயவினால் உடல் படைத்த பெருமைக்குத் தொழுகையை, செல்வம் படைத்த பெருமைக்குத் தான தர்மத்தை நியமமாய்ப் புரிந்து அந்த ஏகதயாபரனிடம் நற்கூலிபெறுவான் என்பதைச் சுட்டிக்காண்பிக்கிறது இந்த ஆயத். மனத்தினால் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டதைச் செயலினால் தொழுகையைக் கொண்டும், (தான) தர்மம்–(ஜகாத்) செய்வதைக் கொண்டும் ஒருவன் உறுதிப்படுத்த வேண்டும். தொழுகை தன் சொந்த நலனுக்கு உரித்தா யிருக்கிறது. தான தர்மம் பிறர் நலனுக்கு (17:26) உரியது. தன்னுயிரைப் போல் மன்னுயிரையும் பராமரிப்பது ஒரு முஸ்லிமுக்குரிய இலக்ஷணமா யிருக்கிறது: 8:3ம், 28:54ம் பார்க்க.

18. இஸ்லாத்தின் மூலாதாரக் கொள்கையில் நான்காவதாக விளங்குவது, ஒருவன் இந்த வேதத்தையும் இதைக் கொணர்ந்த திரு நபியையும் மட்டும் நம்பிவிடுவது போதாது; ஆனால், இதற்கு முன் வந்த சகல வேதங்களையும், அவற்றை வஹீவாயிலாய்ப் பெற்றுப் புவியிடை விட்டுச்சென்ற அத்தனை நபிமார்களையும் (10:47) நன்னம்பிக்கையுடன் (ஈமானாக) ஏற்றுக்கொள்வது அவசியம் என்பதாகும். இவ்வாறு அத்தியாவசியமாக ஈமான் கொள்வதன் விளக்கம் அ. கு. 141-இல் தரப்பட்டிருக்கிறது. உலகில் நிலவும் வேறெந்த மதமும் தனது கோட்பாட்டை இத்துணைப் பரவலாக விரித்துரைத்து, அம்மதத்தைச் சார்ந்தவர் மற்றெல்லா மதத் தீர்க்கதரிசிகளையும்–(நபிமாரையும்) மற்றெல்லா வேதங்களையும்–(கித்தாபுகளையும்) மெய்ந்நம்பிக்கையுடன் அவசியம் ஏற்கத்தான் வேண்டும் என்று வலியுறுத்தவே கிடையாது. இஸ்லாம் முழு அகிலத்துக்கும் அருளப்பட்டுள்ள சரியான நேரிய சன்மார்க்கமாகையால், இஃது ஏனை நபிகள் மீதும் வேதங்கள் மீதும் ஈமான் கொள்வது அவசியமென்று வலியுறுத்துகிறது. 35:24 ஆயத் அச்சமூட்டி எச்சரிப்பவர் தோன்றாத ஜாதியினரே எவருமில்லையென்று நவில்வதாலும், 4:164ம், 40:78ம் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும், பெயர் குறிப்பிடப்படாதிருக்கும் நபிமார்கள்–(தூதர்கள்) இவ் அவனியில் முஹம்மத் (சல்) தோன்று முன்னே அவதரித்திருக்கிறார்கள் என்று குறிப்பிடுவதாலும், நாம் அனைத்து ஜாதியாரின் அத்தனை நபிமார்மீதும், அவர்கள் பெற்றுத் தந்த வேதங்கள் மீதும் நம்பிக்கை வைத்தே ஆகவேண்டும். ஆனாலும், குர்ஆனுக்கு முன்னே தோன்றிய எந்த ஒரு வேதமும் அப்பட்டமான முறையில், மனித சேஷ்டையுடன் கூடிய கலப்படமும் விஷமத்தனமும் புகுத்தப்படாமல் காப்பாற்றப்படவில்லையாகையால் அந்தத் திரிபுண்டுகிடக்கும் வேதங்களின்மீது நாம் (செயல்புரிய)நம்பிக்கைவைக்க வேண்டுமென்ப தன்று கருத்து; ஆனால், அவை அப்பட்டமாயிருந்தன. நபிமார்களால் வஹீ மூலம் இறக்கித் தரப்பட்டன, அவர்களனை வருமே இறைவன் அனுப்பிய தூதர்கள் என்பதை யெல்லாம் ஒவ்வொரு முஸ்லிமும் மனம் வாக்குக் காயத்தால் ஏற்கக் கட்டுப்பட்டிருக்கின்றார். ‘இறைவெனொருவன் இருக்கிறான்’ என்பது அவனனுப்பும் வஹீயின் வாயிலாகத்தான் அறியப் படுகிறது. இவ்வாறாய அறிவிப்பு இப்பாருலக மக்களுக்கெல்லாம் அளிக்கப்பட்டுள்ள தென்பதுதான் குர்ஆனின் கூற்று. இத்துணைப் பரந்த விரிவான கோட்பாடுடைய மார்க்கமாக இஸ்லாம் விளங்குவதால்தான் இதன் பெருமை மற்றெம் மதத்தினும் தலை சிறந்து உயர்ந்தோங்கி நிற்கிறது. மேலும், இதற்குமுன் தோன்றிய நபிமார்களும், அவர்கள் கொணர்ந்த வேதங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டுமே சொந்தமாவர். இஸ்லாமோ எல்லாக் காலத்துக்கும் அனைத்து உலகுக்கும் பொதுவானது. எனவே, நிரப்பமான இது, தாற்காலிகமாய்த் தோன்றிய பழையனவற்றின் மீது, அவையனைத்தும் இறையருளிய வேதங்களேயென ஈமான் கொள்ளுமாறு ஏவுகிறது.

19. ஐந்தாவது மூலக்கொள்கை மரணத்துக்குப் பின் ஒவ்வோர் ஆன்மாவும் மறுவுலக வாழ்க்கைக்கு உட்பட்டே தீரும் என்னும் மெய்ந் நம்பிக்கையாகும். மனிதன் கண்மூடிச் செத்துப்போய்விட்டால், அத்துடன் அனைத்தும் முற்றுப்பெற்று விட்டதாகக் கூறுவோர் சிலருண்டு இவ்அவனியில். இவ்வாறே, செத்த பிணத்துக்குள்ளே அதுவரை ஊசலாடிக் கொண்டிருந்த உயிர் அந்தச் சடலத்தைவிட்டுத் தாவி மற்றொரு சரீரத்துள் புகுந்து கொள்வதாக வாதிடுவோர் பலருண்டு; இதற்கு இறைவன் சான்று ஒன்றுமில்லை. ஆனால் இஸ்லாம் இயம்புவது என்னவென்றால், மனிதன் அவனவனும் தன் தன் மண்ணுலக வாழ்க்கையில் புரிந்த அத்தனை செயல்களுக்கும் தான் தானே உத்தரவாதியா யிருப்பதால், அவன் புரிந்த அத்தனை செயல்களுக்கும் ஏற்றதான நற்கூலியையோ அன்றித் தண்டனையையோ மறுவுலகில் இறுதித் தீர்ப்பு நாளன்று (1:3) பெற்றுத்தான் தீருவான் என்பதாகும் (34:3). அரசாங்கம் கிரிமினல் சட்டத்தை இயற்றுகிறது. இன்னகுற்றம் புரிந்தால் இத்தகைய தண்டனை விதிக்கப்படும் என்று அந்தச் சட்டம் கூறுகிறது. எனவே, அந்தச் சட்டத்துக்குக் கட்டுப்பட்ட பிரஜையாயிருப்பவன் தண்டனைக்கஞ்சி குற்றமிழைக்காமல், தன்னைத் தற்காத்துக்கொள்கிறான். மீறிக் குற்றம்புரிந்து விடுவானானால், அவன் பிடித்துத் தண்டிக்கப்படுகிறான். மனிதனியற்றிக்கொள்ளும் சட்டத்துக்கே இந் நியதியென்றால், இறைவனளித்த சட்டத்துக்கு மாறுசெய்பவன் எப்படித் தப்பமுடியும்? எனவே, இவ்வுலகில் புரியும் சகல நடக்கைகளின் பலாபலன்களுக்கேற்ப அவ்வுலகினில் சரியானகூலி கிடைக்குமென்பதை ஒருவன் மனமார ஏற்றுத்தான் தீரவேண்டும். மறுவுலக வாழ்க்கை உண்டென்பது பகுத்தறிவுக்குப் பொருந்தியதே; அல்லாஹ்வே இதை உறுதிப்படுத்துகிறான். இம் மெய்ந்நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவன் நன்மையான செயல்களை ஏற்றும் தின்மையான செயல்களை விலக்கியும் நடக்கமுடியும். தன் நடக்கைகளுக்குத் தானே ஜவாப்தாரி என்பதை மனிதன் உணரச் சரியான கொறடா இறுதிநாள் மீது உறுதி வைப்பதேதான். எவனொருவன் ஒவ்வொரு வினாடியும் தன் அகக்கண்ணெதிரே இறுதிநாளை நிறுத்திக் கொள்கிறானோ. அவன் மறந்தும் தின்மை புரியான்; இறைவனுக்கு மாறு நினையான். அல்ஆகிரத் தென்றால், இறுதித் தீர்ப்பு நாள் தான் என்று அடுத்துவரும் எட்டாவது ஆயத்தும், குர்ஆன் நெடுகப் பல ஆயாத்களும் திட்டவட்டமாய் விளக்கி விட்டிருக்க, “மிர்’ஜாயிகள்” என்னும் ஒரு கூட்டத்தினர் தங்கள் முரட்டுத் தனமான விடாப்பிடியை வலியத் துருத்துவதற்காக, “அல் ஆகிரத் தென்றால், இத் திருமறைக்குப் பின்னால் வரும் வஹீ அல்லது தூதுச்செய்தி” என்று விபரீதமாக அனர்த்தம் கற்பித்து, கண்கட்டு வேலைசெய்து. திரித்துரைப்பதைச் செவியேற்காது ஒதுக்கித் தள்ளுவதன்றி வேறென் செய்வது? (ஆயத்தின் கடைப்பகுதிக்கு முன் அரைப் புள்ளி அடையாளம் இடப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். அதற்கேற்பப் பொருள் கொள்ளுங்கள்.) குர்ஆன் இறுதியான சட்டதிட்ட மடங்கிய வேதம்; அந்தச் சட்டங்களுக்குப் பங்கம் விளைத்தால் இறுதித் தீர்ப்பு நாளில் தக்க தண்டனை கிடைக்கும்; சட்டங்களை ஏற்று நடந்தால் தக்க பரிசு கிடைக்கும் என்பதுதான் பொருள். இதையே உறுதியாகக் கடைப்பிடிப்போமாக. இப்படிப்பட்ட இறுதித்தீர்ப்பு நாளின் பேரெஜமானன்–(ஏகாதிபதி) எப்படிப்பட்டவன் என்பதை முன் அ. கு. 5-இல் காண்க. இவ்வுலகில் ஒருவன் செய்யும் காரியங்களின் பலா பலனை அவன் மறுஜன்மம் எடுத்தே அனுபவிக்க வேண்டுமென ஹிந்து நண்பர்கள் நம்புகிறார்கள். இஃது அவர்களின் சொந்த அபிப்பிராயம். குர்ஆன் மஜீத் கூறும் மறுவுலக சித்தாந்தம் இறைவனால் வஹீயின் வாயிலாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

20. பின்வரும் 31:5ம் பார்க்க. மத நம்பிக்கை மூன்று, அனுஷ்டானங்கள் இரண்டு, ஆகிய இவ் ஐந்தையும் ஏற்று நடப்பவரே நேர்வழியில் இருப்பவராவார். தங்களைத் தகுதியுடையவர்களாகச் செய்து கொண்டமையால், அன்னவர்கள் ஜெயசீலர்களாகத் திகழ்வார்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான். எனவேதான். 23-ஆவது அத்தியாயத்தின் ஆரம்ப ஆயத்தே மூமின்கள் நிச்சயமாக ஜெயசீலர்களாகி விட்டார்க ளென்று உறுதிப்படுத்துகிறது. நபிபிரானின் தோழர்களாகிய சஹாபாக்கள் கண்ணுக்கு மெய்யான தங்கள் நடவடிக்கைகளின் மூலம் இந்தத் திருவாக்கியங்களின் உண்மையினை அப்பட்டமாக நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். இறுதியுலக வாழ்க்கையிலும் ஜெயசீலர்களாகவே திகழ்வார்கள் இவர்கள்.

21. இந்த ஆயத்தில் ஓர் ‘இடைப் பிறவரல்’ இருப்பதைக் கவனித்துப் பொருள் கொள்ளவேண்டும். மேற்போக்காய் நுனிப்புல் மேய்ந்தால், விபரீத மாற்றுப் பொருள் ஏற்பட்டு விடும். ஸவா’உன் அ’லைஹிம் அ’அன்’தர்த்தஹும் அம்லம் துன்’திர்ஹும் என்னும் தொடரே முற்சொன்ன இடைப் பிறவரலாகும். இவ்வாறு இடைப்பிறவரலாகக் கொள்ளாவிடில், “(ஏ நபியே!) நிச்சயமாக, நிராகரித்து விட்டவர்கள், நீர் அவர்களுக்கு எச்சரிக்கை செய்தாலும் செய்யாவிட்டாலும், இரண்டும் ஒன்றேதானாகையால், அவர்கள் ஒரு காலம் ஈமான் கொள்ளவே மாட்டார்கள்,” என்னும் முரணான கருத்தே பிறக்கும். ஈமானை நிராகரிப்பவன் கடைசிவரை நிராகரிப்பாளனாகவே விளங்குவான் என்பதோ, ஒருமுறை ஈமான் கொள்ளாதவன் பிறகெப்பொழுதுமே ஈமான் கொள்ள மாட்டான், அவன் என்றைக்குமே சன்மார்க்கத்தின் பக்கல் முகம் திரும்பவே மாட்டான் என்பதோ அன்று அக்கூற்று. ஆனால், அவனவனும் தன் தன் சொந்த அறிவைச் செலவிடுவதில் உரிமையான ஜவாப்தாரித்தனத்தைப் பெற்றிருக்கிறான் என்று சற்றுமுன்னே இறைவன் விளக்கியிருக்கும் விளக்கத்தைக் கொண்டு கணிக்குமிடத்து, காபிராயிருப்பவன் (சத்தியத்தை நிராகரிப்பவன்) தனது மனமாட்டுத் தனத்தைத் தானே உறுதிப்படுத்திக் கொள்கிறா னாகையால், அவ்வாறு அவன் அப்பொல்லாங்கைக் களைந்து கொள்கிற வரையில் நபிபிரானின் எச்சரிக்கை அவனுக்கேதும் நற்பயன் நல்காது என்பதே கருத்து. அம் மகான் இஸ்லாமிய பிரசாரம் புரிகிற காலத்தில் மக்கத்துக் காபிர்கள் அத்தனைபேருமே ஈமான் கொள்ளாமற் போகவில்லை. எவரெவர் தத்தம் மனத்தைச் செலுத்தி மாசு மறு அகற்றிக்கொண்டனரோ. அவரவரும் முஸ்லிமாகிவிட்டனர். அபூ ஜஹ்ல், அபூலஹப் என்பவர்களை உள்ளிட்ட எத்தனை போக்கிரிகள் தங்கள் மனமுரட்டுத்தனத்தை விட்டுக் கொடுக்கவில்லையோ, அத்தனை பேரும் இறுதிவரை காபிர்களாகவே சீரழிந்து செத்தார்கள். அத்தகையோருக்கு நபிபிரான் (சல்) எச்சரிக்கை செய்தும் பயனில்லை, செய்யாமலிருந்தும் ஒன்றுமில்லை என்பதே இத்திருவாக்கியத்தின் பொழிப்பாகும். எத்தனை நன்மைகளை உபதேசித்தாலும் கன்னெஞ்சக் காபிர்களின் உள்ளத்துள் கொஞ்சமும் அவை பதியமாட்டா என்பதைப் பின்வரும் 7:179 எத்துணை அழகாக விவரித்திருக்கிறது பாருங்கள். அன்றியும், நபிகணாதர் (சல்) எச்சரித்தாலும், எச்சரிக்காவிட்டாலும், வன்னெஞ்சராயுள்ள காபிர்கள் ஏன் மனம் திரும்பமாட்டார்கள் என்னும் காரணத்தை அடுத்த ஆயத் (2:7) தொகுத்துரைப்பதைப் படித்துப் பாருங்கள். காபிர்கள் பகுத்தறி வென்னும் ஞானத்தின் மூளை வாயிலயும், சத்தியத்தை நாடிச் செல்லல் என்னும் நல்வழியில் உளவாயிலையும் சாத்தித் தாழக்கோலிட்டுக் கொண்டார்கள். அவர்களே தங்கள் சொந்த நடக்கையான் தங்கள் ஜவாப்தாரித் தனத்தைக்கொண்டு கதவை இழுத்துச் சாத்திக் கொண்டு விட்டமையால், இறைவன் அந்த மூடப்பட்ட கபாடங்களின்மீது தன் முத்திரையை இட்டுவிட்டான்: திறந்திருந்தும், நேத்திரங்களுக்குத் திரையிட்டு மறைத்து விட்டான். அவனவன் புரியும் செயலுக்கான முடிவை அவனவனும் அவசியம் அடைந்தே தீர்வான் என்பது இறைநியதி யாகையால், இறைவனே காபிர்களைக் கண் திறக்க வொட்டாமல் செய்துவிடுகிறா னென்று வாதிப்பதோ, அவன் நாடினால் எல்லாக் காபிர்களையும் மூமின்களாக உயர்த்தி விட முடியாதா? என்று வினவுவதோ அறிவுடைமை யாகாது. அல்லாஹ் மனிதனைப் படைத்து. அவனுக்கொரு பகுத்தறிவையும் அளித்து, நல்லவழி இன்னது, தீயவழி இன்னதென்று வகுத்தும் கொடுத்திருக்கிறான். மனமுரணில்லாமல் ஒழுகிக் கொள்ள வேண்டுவது அடியான் பொறுப்பு. இன்றேல், தான் புரிந்த செயலின் விபரீத விளைவாக இதயம் “ஸீல்” இடப்பெறுகிறான்; கண்ணிருந்தும் குருடனாகி விடுகிறான்; காதிருந்தும் செவிடனாகிவிடுகிறான். அதனால், நல்வழியைப் பார்க்கும் சக்தியையுங்கூடத் தானே–(சுயமே) இழந்துவிடுகிறான். இந்த ஆயத்தை ஊன்றிப் படித்துத் தேர்ந்து தெளிந்து மெய்யை யுணர்வீர்களாக. இறைவன் எவரையும் (தானே) வழிகெடுப்ப தில்லை; அவனவனே தன்னைத் தானே கெடுத்துக் கொள்கிறான். அவ்வாறு தன்னைத் தானே கெடுத்துக் கொண்ட காரணத்தால் இவ்வுலக வாழ்வில் குர்ஆனைப் பார்க்கும் பெற்றியையும், இது போதிக்கும் ஞானத்தைச் செவியேற்கும் பாக்கியத்தையும், அதனால் இதயம் தெளிவு பெறும் வீடெனும் பேற்றையும் பெறும் அருகதையை இழந்து, மறுவுலக வாழ்வில் மகத்தான நோவினையுண்ணும் தண்டனைக்கு இலக்காகிவிடுகிறான். 7:193; 36:10ம் பார்க்க. இந்த அத்தி.யின் முதற்பிரிவாகிய ஏழு ஆயாத்களும் ஏற்போர், நிராகரிப்போர் ஆகிய இருசாராரின் குணாகுணங்களையும், அவர்கள் பெறும் பலா பலன்களையும் எத்துணை யழகாகத் திரட்டி முதற்கண் ஊட்டிவிடுகின்றன பாருங்கள்! குர்ஆனுக்கு முன்னே தோன்றியதாகக் கூறிக் கொள்ளும் வேதங்களையும், ஆகமங்களையும். புதிய, பழைய ஏற்பாடுகளையும், கீதை, உபநிஷதுகளையும் திறந்து பார்த்தால், இப்படிப்பட்ட தோற்றுவாய்–சாராம்சத் தாய்ச்சரக்கு அமைந்தே இருக்கவில்லை யென்பதைக் கண்கூடாய்க் கண்டுகொள்ளலாம்.

Image courtesy: SalatTimes.com

Related Articles

Leave a Comment