பிரிவு 1: இஸ்லாத்தின் மூலக் கொள்கைகள்

அருளாளனும் அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திருநாமத்தை(த் துணை)க் கொண்டு.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

1. அலிப்; லாம்; மீம்.1

الٓمٓ

2. இந்தக்2 கிரந்தம்,3 – இதில் ஐயம் (அணுத்துணையும்) இல்லை, –தின்மையை விட்டுத் தங்களைத் தற்காத்துக் கொள்ளுகின்றவர்களுக்கு4 நேர்வழி(காட்டி)யாக5 இருக்கிறது.

ذَٰلِكَ ٱلْكِتَـٰبُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ

3. அவர்கள் மறைவானதன் மீது6 ஈமான்கொண்டும், தொழுகையை7 நியமமாய் நிலைநிறுத்தியும், அவர்களுக்கு (அல்லாஹ்வாகிய) நாம் அருளியுள்ளதி னின்று (அதிகம் தருமச்) செலவு செய்தும் வருபவர்கள்;8

ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِٱلْغَيْبِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَمِمَّا رَزَقْنَـٰهُمْ يُنفِقُونَ


  1. இந்த அத்தியாயத்திலும், மற்றும் 28 வேறு பல அத்தியாயங்களிலும் இம்மாதிரி ஒரு சில எழுத்துக்களுடன் திருவாக்கியங்கள் தொடங்குகின்றன. இங்கே மூன்றெழுத்துக்கள் உள்ளன. 19-ஆம் அத்தியாயத்தில் ஐந்தெழுத்துக்கள் உள்ளன. ஒவ்வோர் எழுத்தையும் தனித்தனியே பிரித்துப் படிக்க வேண்டுமன்றி. சேர்த்து உச்சரித்துவிடக் கூடாது. இம்மாதிரியாக ஒரு சூறாவின் ஆரம்பத்தில் அமைந்துள்ள அரப் அக்ஷரங்கள் (42-ஆவது அத்தியாயத்தின் ஆரம்ப ஆயத்தும் அடுத்த ஆயத்தும் அக்ஷரங்களுடனே அமைந்திருப்பதைக் கவனியுங்கள்) ‘ஹுரூ’பெ மு:கத்த ஆ’த்–(தனித்தனியே ஓதப்பட வேண்டிய எழுத்துக்கள்) என்று அழைக்கப் படுகின்றன. இவ்வெழுத்துக்களுக்கு இன்ன கருத்தைத்தான் வழங்க வேண்டும் என்று ஏகோபித்த அபிப்பிராயம் நிலவவில்லை யாகையால், இவற்றுக்குப் பொருள் வரையாமல், உச்சரிப்பின்படியே நாம் எழுதிக் காட்டி வருவோம். இங்கே அலிப், லாம், மீம் என்னும் எழுத்துக்கள், மூன்று அரப் வார்த்தைகளான அன, அல்லாஹ், அஃலம் என்னும் சொற்களிலிருந்து முறையே முதல் இடை கடை அக்ஷரங்களாக எடுக்கப்பட்டுள்ளன வென்றும், இச்சொற்றொடருக்கு “நானே அல்லாஹ். எல்லாம் அறிந்தவன்” என்பது பொருளாகுமென்றும் இப்னு அப்பாஸ் (றலி) இயம்பியுள்ளார்கள். இவ்வாறாக இத்திருமறை, தான் எல்லாம் வல்ல அல்லாஹ்வினாலே அருளப்பட்டுள்ளதெனத் தன்னறிவிப்புக் கூறுகிறது. எல்லா விஞ்ஞானமும், எல்லாத் தர்க்கவாத சாஸ்திரங்களும் இறைவனொருவன் இருக்கத்தான் வேண்டுமெனக் குறிப்பாகக் காட்டு மல்லது, இறைவன் இருக்கிறான் எனறு நேரே நிரூபித்துக் காட்டமாட்டா. இக்காரணத்தினாலேதான் பற்பல விஞ்ஞானிகளும் தர்க்கவாத சாஸ்திரிகளும் நாத்திகர்களா யிருக்கிறார்கள். எனவேதான், இத்திருமறையின் தொடக்கத்திலேயே இறைவன், “நானே அல்லாஹ். எல்லாம் அறிந்தவன்; அப்படிப்பட்ட நானேதான் இவ்வேதத்தின் கிரந்தகர்த்தா” என்று கூறுகிறான். எனினும், அல்லாஹ்வும் அவனுடைய றஸூலுமே இந்தத் தனி எழுத்துக்களின் சரியான தாத்பரியத்தை உணர்ந்துளார்கள். அயல் மதவாதிகள் சிலர் குறும்புத்தனமான முறையில் இந்த எழுத்துக்களுக்கு வியாக்கியானம் வரைவதுண்டு : ஆரம்ப காலத்தில் குர்ஆனை ஏட்டில் எழுதி வைத்த இலேக்கர்கள்–(எழுத்தாளர்கள்) தத்தம் கைப்பட வரைந்த அத்தியாயத்தகளின் முகப்பில் இவ்வாறு தங்கள் பெயரின் விலாச எழுத்துக்களைப் பொறித்து விட்டிருக்கிறார்கள் என்றும், இந்த எழுத்துக்கள் குர்ஆன் வாசகத்தைச் சேராதவை என்றும் அவர்கள் குதர்க்கம் புரிவதுண்டு. ஏனென்றால், இந்தக் காலத்தில் கட்டுரை வரைபவர்கள், சித்திரம் தீட்டுவோர், அசல் நூல்களைப் பிரதி செய்வோர் தங்கள் முழுப்பெயரை அல்லது பெயரின் முதலெழுத்துக்களை அவற்றில் பொறிக்கிறார்களல்லவா? இதைப் பார்த்துவிட்டு, குர்ஆனுக்கும் அப்படி இருந்திருக்கும்போலுமென்று அவர்கள் தாமாகவே கற்பித்து விட்டிருக்கின்றார்கள். ஆனால், வஹீயின் ஆரம்ப காலத்திலேயே மக்காவில் 19, 20- ஆவது அத்தியாயங்கள் வெளியாகி, அப்பொழுதே அவை “ஹுரூபெ முகத்தஆத்”தாக ஒப்பிக்கப்பட்டு வந்திருக்கின்றமையால், பிரதி செய்தவர்கள் தங்கள் விலாச எழுத்துக்களை இவ்வாறு பொறித்தார்கள் என்று மாற்றார் உரைப்பதை நாம் ஒதுக்கித் தள்ளுவோம். நபிபிரான் (சல்) குர் ஆன் ஓதும் பொழுதே அந்த எழுத்துக்களை உச்சரித்தே ஓதினார்கள் என்பதற்கு நிரம்ப ஆதாரங்கள் இருப்பதால் எதிரிகள் திரித்து விடும் கயிற்றை நாம் புறக்கணித்தே தீரவேண்டும். மொத்தம் 29 அத்தியாயங்களின் தொடக்கத்தில் இப்படிப்பட்ட குறிப்பெழுத்துக்கள் உண்டென்று முன்னே சொன்னோம். அவற்றுள் இந்த அத்தியாயம், 3, 29, 30, 31, 32 ஆகிய ஆறு அத்தியாயங்களிலேதாம் அலிப் லாம் மீம் என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மற்றவற்றுக்குரிய குறிப்பெழுத்துக்கள் அங்கங்கே விமர்சனம் புரியப்பெறும். இங்குள்ள இம்மூன்று எழுத்துக்களையும் அலிப் லாஅம் மீஇம் என்று அளபெடுத்து உச்சரித்தல் அவசியமாம். ↩︎
  2. அண்மையி லுள்ளதைச் சுட்டிக்காட்ட ஹா’தா என்னும் சொல்லும், சேய்மையி லுள்ளதைக் குறித்துக் காட்ட ‘தாலி(க்)க என்னும் சொல்லும் அரப் மரபுப்படி குர்ஆனில் வழங்கப்பட்டு வருவதா யிருப்பினும், “இந்த வேதம்” என்று பொருள் பயக்கும் இவ்விடத்தில், 17:9-இல் உள்ளதுபோல, “ஹாதா” என்று வழங்காமல், “தாலி(க்)க” என்று வழங்கியிருக்கும் காரணத்தை ஊன்றிக் கவனித்தல் வேண்டும். குர்ஆன் இப்புவியிடைத் தோன்றுவதற்கு முன் இறைவனால் இறக்கப்பட்ட பண்டை வேதங்கள் இவ்வாறு ஓர் இறுதி வேதம் வரத்தான் போகிற தென்பதைச் சுட்டிக் காட்டிக் கொண்டே யிருந்தன. இறுதி நபி அவதரிப்பார் என்றும், அவர் இந்த இறுதி வேதத்தைப் பெற்று மக்களிடை விட்டுச் செல்வார் என்றும், இறைவன் முந்திய கிக்தாபுகளில்–(வேதங்களில்) வாக்களித்திருந்தானே, அந்த வாக்கு இப்பொழுது நிறைவேற்றப் பட்டுவிட்ட தென்பதை எதஹூதிகளுக்கும் நசாராக்களுக்கும் காபிர்களுக்கும் நன்கெடுத்துக் காட்டுதற்காக “இந்த” என்னும் அண்மைச் சுட்டைப் பொருத்தாமல் “(முன்பு வாக்களிக்கப்பட்ட) அந்த வேதம்” என்னும் கருத்தை யுள்ளடக்கி, மாந்தர் மிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அதுவே இதுவாகும் என்பதை இவ்வாறு அழகுற அமைத்துளான் அவன். அன்றியும், வேறு சில வியாக்கியானிகள், அண்மையிலுள்ள கண்ணியமும் கௌரவமும் பொருந்திய ஒரு பொருளை தாலிக்க என்றே மரியாதை கலந்த கட்டுடன் குறிப்பிடுவது அரபுமொழி இலக்கண மரபென்று கூறுவதால், “அந்த” என்னும் பொருளைப் பயக்காமல் “இந்த” என்னும் பொருளே இங்குக் குறிக்கப்படுகிற தென்றும் கூறலாம். ↩︎
  3. எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட காகிதங்கள் அனைத்தும் ஒருங்கு திரட்டப்பட்டு ஒரு நூலுருவாக அல்லது பெரிய புத்தக வடிவாக அமையும்போது அது “கி(த்)தாப்” என்று சொல்லப்படும். க(த்)தப’ எழுதினான்: கா(த்)திப் எழுதுபவன், கி(த்)தாப்-கிரந்தம் (புத்தகம், கடிதம், நூல்). இறைவ னிறக்கிய வேதங்கள் யாவுமே பொதுவாகக் “கித்தாப்” என்றே ஒருமையாக அல்லது “குத்துப்” என்று பன்மையாக அழைக்கப்பட்ட போதினும், அல் கித்தாப் என்னும் சிறப்புச் சொல், குர்ஆனுக்குரிய பிறிதரு நாமம் என்பதை நினைவில் இருத்து வீர்களாக. வேதபுத்தக மொன்று பூர்த்தியான அளவில் சம்பூர்ணமாக நபிபிரானுக்கு இறக்கப்பட்ட தென்பதில் ஐயங்கொள்ளும் எதிர்மதவாதிகள் அம்மஹான் (சல்) ஏதேதோ மனம்போன போக்கில் உபதேசித்தாரென்றும், அவை இறைவனின் வசனங்களல்ல வென்றும்–துண்டு துண்டாக–ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல், அவ்வப்போது தமக்குப் பட்டதை அவர் சொன்னாரென்றும் கற்பித்து விடுகின்றனர். அத்தகைய இஸ்லாத்தின் எதிரிகளுக்கு ஒரு பக்கா அறைகூவலாக அமைந்துவிட்டிருக்கிறது இச்சொல். சம்பூர்ணத்தைப் பெற்றுக்கொண்ட கிரந்தம் – வேதம் – தானென்று குர்ஆன் தன்னை ஆரம்பத்திலேயே வாசகர்களுக்கு அறிவித்துக் கொடுக்கிறது. துண்டு துண்டான உபதேசங்களோ, அல்லது வெற்றுத் தொடரான வெறு நீதி வாக்கியங்களோ அல்ல குர் ஆன்; ஆனால், இறைவனாலே தொகுக்கப்பட்டு, சிறுகச் சிறுக வஹீவாயிலாக நபிபிரானுக்கு இறக்கி வைக்கப்பட்ட முழுக் கித்தாப் இது என்பதை உறுதிப் படுத்தவே, “இதோ குர் ஆன்!” என்று பாராக்குக் கூறி வெளிப்படாமல், “முன்பெல்லாம் வாக்களிக்கப்பட்டு வந்ததே அந்தப் பூர்த்தியான முழு வேத நூல் இது!” என்று மேகத்தினிடை யிருந்து வெளிப்படும் பரிதியேபோல் சுடர்வீசி முன்வந்து நிற்கிறது இவ்வேதம். மேலும், குர்ஆன் ஆரம்ப முதலே வரைந்து பத்திரப்படுத்தப்பட்டு வந்த ஒரு முழு நூலாக இருந்ததன்றி, குற்றங் கற்பிக்கிற விமரிசகர்கள் சிலர் தவறாக உரைப்பதேபோல் நபிபிரானுக்குப் பின்னர்ச் சில ஆண்டுகள் கழித்துத் திரட்டப் பட்ட கோவைப் பிரபந்தமன்று இவ்வேதம் என்பதை இந்த ‘அல் கித்தாப்’ என்னும் காரணப் பெயர் நன்கு விளக்கிவிட் டிருக்கிறது. இறைவன் நாட்டத்தில் இத்திருமறை ஆதியிலிருந்தே ஒழுங்காகத் தொகுக்கப் பட்டிருந்த தென்பதையும் இந்த நாமம் விளக்கி வைக்கிறது. குர்ஆன் கையெழுத்துப் பிரதிகளா லான கித்தாபாகவும், மனப்பாடமாக நெட்டுருச் செய்யப்பட்ட சாசுவத சாசனமாகவுமே அன்று முதல் இன்றளவும் நின்று விளங்குகிறது. மேலே தோற்றுவாயில் குறிப்பிட்டவாறு, இப்புவியிடை நிலவும் அனைத்து மறைகளுள்ளும் இவ்வொரு வேத நூல் மட்டுமே எடுத்த எடுப்பில் தான் யாரென்பதைத் திட்டவட்டமாக அறிமுகப்படுத்திக் கொண்டு, பீடுகெழு பெருமையுடன் நடை போட்டுத் துவங்குகின்றது. ↩︎
  4. த:க்வா – (இறைவனிடத்து அச்சப்பாடு – 74:56) உடையவர் முத்த:கீ என்று அழைக்கப்படுவார்; அல்லது பய பக்தியுடன் இருப்பவர்” என்றும் பொருளுரைக்கலாம். ஆனாலும், “முத்தக்கீ” என்னும் சொல்லின் மூலவினைச் சொல்லாகிய இத்த:கா என்றால், “அவன் தன்னை மிக நன்றாகத் தற்காத்துக் கொண்டான்” என்று பொருள்படுமாகையால், முத்தக்கீ என்பவன் பாபத்தினின்றும், மறுவுலகில் தன்னைப் பாதிக்கக்கூடிய தீமைகளினின்றும் தன்னை மிக நன்றாகத் தற்காத்துக் கொள்ளுகிறவன் என்று சொல்லலாம். எவனொருவன் பாபங் களைந்து, நற்செயல் புரிந்து தன்னை உத்தமனாக்கிக் கொள்ள வேண்டிய தற்காப்புக் கேடயங்களைச் செப்பஞ் செய்துகொள்கிறானோ, அவனுக்கே இவ்வேதம் நேர்வழிகாட்டியா யிருக்கும் என்பது கண்கூடு (7:26 பார்க்க). அவ்வாறாய பாபமேனும், தின்மையேனும் வந்தணுகாமல் தன் கடமையில் சர்வ ஜாக்கிரதையுடன் ஒழுகிக் கொள்வதையும் தக்வா என்னுஞ் சொல் விவரிக்கிறது. முன்பெல்லாம் வேதங்கள் அருளப்பட்டு, வழிதவறி நடந்து, தங்களையும் பாவிகளாக்கிக்கொண்டு, தங்களுக்கு அருளப்பட்ட வேதங்களையும் வீணாக்கிக் கொண்டார்களே, அவர்களை நினைவு படுத்துகிறது இத் திருவாக்கியம். முத்தக்கீன்களுக்கு மட்டுமே இது ஹுதாவாக – (வழிகாட்டியாக) விளங்கும். பெயரளவில் தம்மை முஸ்லிமென்று அழைத்துக் கொண்டு நிரீசுவரவாதம் புரிகின்ற, நாத்திகம் பேசுகின்ற அப்படிப்பட்ட போலி மனிதர்களுக்கு இது நேர்வழி காட்ட மாட்டாது. நேர் வழியைப் பெற்றுக் கொள்ள ஒருவன் அனைத்து யோக்கியதைகளையும் அடைந்திருத்தல் வேண்டும்; அவனுக்கே நற்பலனும் நன்மார்க்கமும் கிட்டும். அப்படிப்பட்ட முத்தக்கீ எந்த எந்த இலக்ஷணங்களுடன் கூடியவனா யிருப்பான் என்பது அடுத்து விவரிக்கப்படுகிறது. இவ்வுலகில் உத்தமராய் வாழ்பவருக்கே அவ்வுலகில் ஆத்மிக அருஞ்சுவனம் கிட்டுதற்கு இவ்வேதம் நேர்வழி காட்டியா யிலங்குமென்பது கருத்து. (முழுவிளக்கம் அ.கு. 2707- இல் காண்க) ↩︎
  5. சென்ற அத்தியாயத்தில் நாம், நேரான பாதையில் நம்மை நடாத்தி வைக்குமாறு இறைவனிடத்து இறைஞ்சுதல் புரிந்தோம். இதற்கு விடையில் அவ் இறைவன் ஹுதன் லில் முத்தகீன் –தின்மையை விட்டுத் தங்களைத் தற்காத்துக் கொள்கிறவர்களுக்கு இந்தக் கிரந்தம் நேர்வழிகாட்டியாக இருக்கிறதென இயம்பியுள்ளான்; 47:17ம் பார்க்க. ↩︎
  6. மறைவானது என்பது வானவர்களாய அமரர்களையும் குறிக்கும். இவர்களைப்பற்றிப் பின் வரும் ஆயத் 177-இன் கீழே நோக்க. இக்காலத்தில், “கண்ணுக்குப் புலப்படுவதை மட்டுமே நான் நம்புவேன்; கட் புலனாகாத ஒன்றை நம்பமாட்டேன்!” என்று பல நாத்திகர்கள் இடையறாது கதறி வருகிறார்கள். ஆனால், தின்மையை விட்டுத் தங்களைத் தற்காத்துக் கொள்பவர்கள், மாந்தரின் சாதாரண ஐம்புல நுகர்ச்சிக்கும் அப்பாற்பட்ட (அல் :கய்ப்) திட்ப நுட்ப விஷயங்களையும் மனமார ஏற்றுக் கொள்வார்கள் என்பது கருத்து. அல்லாஹ்வை எந்தப் புறக்கண்ணாலும் காணவோ, எந்தப் புறக்காதாலும் கேட்கவோ முடியாது. கட்புலனாகாது மறைந்து நிற்பது ‘கய்ப்’. நிரீசுவரவாதம் பேசுகிற விஞ்ஞானி யொருவன் தான் இறைவனைக் கண்டதேயில்லை யாகையால் அவன்மீது எப்படி நம்பிக்கை வைக்கமுடியும்? என்று வினவுகிறான். ஆனால், அவன் ஆராய்ச்சி செய்கிற சகல ரசாயன சாஸ்திரமும் விஞ்ஞானமும் எப்படிப்பட்ட கண்ணுக்கும் மாபெரும் பூதக் கண்ணாடிக்கும் கூடக் கிஞ்சித்தும் புலனே ஆகாத அணுவை (Atom) ஜீவநாடியாகக் கொண்டுள்ளன என்பதை அடிப்படையாக வைத்தும், அந்த அணுவின்மீதும் அதன் சக்தியின் மீதும் பூரண நம்பிக்கை வைத்துமே தன் சித்தாந்தங்களை மாபெருங் கட்டிடமாக நிர்மாணிக்கிறான். இங்ஙனமாகக் கட்புலனாகாத (கய்பான) அணுவின் மீது நம்பிக்கை கொண்டேதான் அவன் விஞ்ஞானத்தை வெல்கிறான்; ஆனால், அதே மாதிரி கட்புலனாகாத அல்லாஹ்வையும், அவனுடைய அமரர்களையும் கொஞ்சமும் நம்ப முயலாமல் தனது உள்ளத்தைப் பாழ்படுத்திக் கொள்கிறான். விஞ்ஞானத்தை வளர்க்க முற்படுகிறவன் எப்படிக் கட்புலனாகா அணுவின்மீது நம்பிக்கை வைத்து அத்துறையில் வெற்றி பெறுகிறானோ. அவ்வாறே ஆத்மிகத்தை வளர்க்க முற்படுகிற தக்வாவுடையவன் ஐம்புலனுக்கும் அப்பாற்பட்ட அல்லாஹ்வின்மீதும் அவனுடைய அமரர்கள் மீதும் முதற்கண் ஈமான்–(நம்பிக்கை) கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடற்பாலது. இறைவன் புறக் கண்ணுக்குப் புலப்படாது மறைவா யிருப்பவன். அவன்மீது நம்பிக்கை வைப்பது அடிப்படை என்பது இங்கே ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. ↩︎
  7. மறைவாக எங்கும் வியாபித்து நிற்கும் அல்லாஹ்வின்மீது நன்னம்பிக்கை வைத்தவன் அடுத்தபடியாக அக்கணமே செய்ய வேண்டிய கடமை சலாத் என்று இங்கே குறிக்கப்படுகிறது. இச் சொல்லுக்குத் “தொழுகை” அல்லது “பிரார்த்தனை” அல்லது “வேண்டுகோள்” என்பது பொருள். கண்ட நேரத்தில் கணக்கு வழக்கில்லாமல், அல்லது இஷ்டப்பட்ட நேரத்தில் ஏற்றும், மற்ற நேரத்தில் விட்டும் மாறு செய்யாமல், குறித்த நேரத்தில் குறித்த கணக்கின்படி நியமநியதியுடனும் நேர்மையான நெறியுடனும் தொழுகை நிறைவேற்றப்படுதல் அவசியமென்பதை வலியுறுத்துகிறது இந்தச் சொல். இறைவனை மனமார ஏற்றுக கொள்வதே போதும்; அவ்வாறு ஏற்றுக்கொண்டதற்கு அறிகுறியாக எப்பொழுதாவது அவனை வணங்கித் துதித்தால் போதும் என்பதன்று இஸ்லாம். ஆனால், நியமமாக அந்தக் கடமையைக் குறித்த நேரத்தில் நிறைவேற்றுதல் ஒருவற்குக் கடனாம். 4:103 நோக்க. ↩︎
  8. இறைவன் மீது முதலில் நம்பிக்கை வைத்து அதன் தொடர்ச்சியாக அவனை வணங்கி வழிபட்டு. மூன்றாவதாக அவனளித்துள்ளதி லிருந்து செலவு செய்து தான தர்மம் வழங்க வேண்டும் என்பது வரிசைக் கிரமமாக இங்கே அமைந்திருக்கும் நேர்த்தியை நோட்டமிடுங்கள். “எனது சுய முயற்சியாலும் எனது சொந்த சாமர்த்தியத்தாலும், எனது முன் யோசனையாலும். எனது சதுரப்பாட்டுத் திறமையாலுமே இவ்வளவு சொத்தையும் சேகரித்தேன்!” என்று இறைவனை மறந்து தம்மைத் தாமே மெச்சிப் புகழ்ந்து தற்பெருமையடித்துக் கொள்பவரின் மண்டைமீது ஓங்கியடிக்கிறது இந்த இறை வாக்கியம். ஒரு மனிதன் எதைத் திரட்டினாலும், அது மறைவான இறைவனருளிய பாக்கியமே யன்றி வேறன்று. இவ் வுண்மையை யறிந்த முத்தக்கீயானவன் இறைவனளித்த நிதிக்குவியலை இறைவன் பொருட்டாகவே தானதர்மம் செய்வான், தத்தம் செய்வான், தியாகம் பண்ணுவான். ஆனால், எவனொருவன் தான் சம்பாத்தியம் பண்ணியது தன்னுடையதென்று உரிமை பாராட்டுகிறானோ. அவன் தானும் உண்ணான், பிறர்க்கும் ஈயான், தானம் கொடான், தர்மம் புரியான், பூமியில் புதைத்து வைத்துத் தானும் புதையுண்டு போவான். எனவே இறைவன் மீது அசையாத உறுதி வைத்தவன் அவ்விறைவன் தயவினால் உடல் படைத்த பெருமைக்குத் தொழுகையை, செல்வம் படைத்த பெருமைக்குத் தான தர்மத்தை நியமமாய்ப் புரிந்து அந்த ஏகதயாபரனிடம் நற்கூலிபெறுவான் என்பதைச் சுட்டிக்காண்பிக்கிறது இந்த ஆயத். மனத்தினால் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டதைச் செயலினால் தொழுகையைக் கொண்டும், (தான) தர்மம்–(ஜகாத்) செய்வதைக் கொண்டும் ஒருவன் உறுதிப்படுத்த வேண்டும். தொழுகை தன் சொந்த நலனுக்கு உரித்தா யிருக்கிறது. தான தர்மம் பிறர் நலனுக்கு (17:26) உரியது. தன்னுயிரைப் போல் மன்னுயிரையும் பராமரிப்பது ஒரு முஸ்லிமுக்குரிய இலக்ஷணமா யிருக்கிறது: 8:3ம், 28:54ம் பார்க்க. ↩︎

Image courtesy: SalatTimes.com


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment