32 – குறையெல்லாம் குறையல்ல

by நூருத்தீன்

கி.மு. நான்காம் நூற்றாண்டில் பண்டைய கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் டெமாஸ்தெனஸ் (Demosthenes) என்றொரு அரசியல்வாதி இருந்தார். அலெக்ஸாண்டரின்

ஆளுமைக்கு எதிராகப் புரட்சியெல்லாம் முயன்று பார்த்தவர். இவரிடம் திறமை ஒன்று இருந்தது – ஆளை அசத்தும் பேச்சு.

சரி, அதற்கு என்ன இப்போ?

அவர் சிறுவனாய் இருந்தபோது அவரிடம் ஒரு குறை இருந்தது. திக்கித் திக்கித்தான் பேசுவார். வாக்கியங்களைத் தடையின்றி முழுமையாய்ப் பேச அவரால் முடியாது. அந்தக் காலத்தில் எந்த ENT ஸ்பெஷலிஸ்ட்டைப் போய்ப் பார்ப்பது? எனவே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. வாயில் சிறு, சிறு கூழாங்கற்களை அடைத்துக் கொண்டு கிரேக்க மொழியில் ‘அணில், ஆடு, இலை’ என்று பேசிப் பழக ஆரம்பித்தார் டெமாஸ்தெனஸ். அசரவில்லை; சோர்ந்து போகவில்லை; தினந்தோறும் கடுமையான பயிற்சி. சாப்பிடும்போது மட்டும் கல் நீக்கிச் சோறு சாப்பிடுவாரோ என்னவோ, விடாத பயிற்சி. முடிவு? வாய்மேல் பலன் கிடைத்தது. இவர் ஒரு மிகச் சிறந்த சொற்பொழிவாளராக, பேச்சாளராக மாறிப்போனார். இன்றும் வரலாற்றுப் புத்தகங்களில் அந்தச் சிறப்புத் தகுதியுடனேயே குறித்து வைக்கப்பட்டுள்ளார்.

நம் எல்லோரிடமும் குறையுண்டு. அது உடல் குறையாக இருக்கலாம். மனதில் இருக்கலாம்; செயலில் இருக்கலாம்; சிந்தனையில் இருக்கலாம். ஏதோ ஒன்று, ஒன்றுக்கு மேற்பட்டு என்பது மட்டும் நிச்சயம். ஆனால் அந்தக் குறை நம் இலட்சியத்தை, குறிக்கோளை, மன மகிழ்வை எவ்விதத்திலும் தடுத்துவிடக் கூடாது; அப்படித் தடுப்பதுதான் உண்மையான குறை.

இறைச் சக்திக்கு அப்பாற்பட்டு, நம்முடைய இலக்கை நாம் அடைந்துவிடாமல் தடுக்கக்கூடிய ஒன்று இருக்குமெனில் அது ‘என்னால் முடியாது’ என்ற நம் எண்ணம் மட்டுமே! அதனால்தான் ‘என்னால் முடியும் தம்பி’ என்று நம்பிக்கையுடன் செயலாற்றுபவர்களெல்லாம் சாதிக்கிறார்கள். ‘என்னத்த செஞ்சு, என்னத்த சாதிச்சு’ என்று அலுத்துக் கொள்பவர்கள் மட்டும் ‘என்னத்த கண்ணய்யா’ ஆகிவிட வேண்டியதுதான்.

‘நான் தேர்வில் ஃபெயிலாகவே போகிறேன், நம்பிக்கையே இல்லை’ என்று ஒரு மாணவன் நினைத்தால் அவனது மனது அவனை வெற்றிக்குத் தயாராக்கப் போவதில்லை. பசை தடவி ஒட்டிய போஸ்டராக அவனது மனமெங்கும் அவநம்பிக்கை மட்டுமே பரவி ஒட்டிக்கொள்ளும். படிக்க, கற்றுக்கொள்ள என்று எந்த முயற்சியும் எடுக்கவிடாமல் அவனைச் சோர்ந்து போகச் செய்து, அவனது தீர்க்கதரிசனம் மெய்ப்படச் செய்யும்.

‘எனக்குத்தான் அப்பவே தெரியுமே’ என்று மதிப்பெண் பட்டியலைப் பார்த்து மனம் கெக்கலிக்கும்.

அதே மற்றொருவர், ‘எனக்கு என் இலட்சியம் முக்கியம். நிச்சயம் அதில் எனக்கு வெற்றி கிடைக்கும்’ என்று திடமாக நம்பிவிட்டால் அதற்காக அவரை அவரது மனது தயாராக்கிவிடும். ‘என்ன செய்யவேண்டுமானாலும் சரியே. நீண்ட நேரம் உழைக்கணுமா, கண் விழிக்கணுமா, எல்லாத்துக்கும் தயார்’ என்று கைமுறுக்கி, தொடை தட்டி நிற்பார்; சாதிப்பார்!

இவை இரண்டிலும் அதற்குரிய பலாபலன் ஒன்று உண்டு. என்ன அது?

‘நான் அம்பேல்’ என்று நினைப்பவருக்குத் தற்காலிக சுகமும் சௌகரியமும் ஏற்பட்டுவிடுகிறது. எவ்விதப் பொறுப்பையும் அவர் சுமக்கத் தேவையில்லை; ‘என்னால் முடியல இதைக் கொஞ்சம் செய்து கொடேன்’ என்று பிறரிடம் உதவி பெற்றுக்கொள்ள முடிகிறது; வெற்றிக்குத் தேவையான சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, முறைப்படுத்தப்பட்ட செயல்கள் என்று எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் இஷ்டத்திற்குத் திரிய முடிகிறது. சில சமயம் ‘ஐயோ பாவம்’ என்று பிறரிடம் அனுதாபமும் பெற்றுக்கொள்ள முடிகிறது.

இரண்டாமவர் இறுதியில் வெற்றியடைந்திருந்தாலும் அதற்காக அவர் செலவிட்டதும் தாங்கியதும் நிறைய. உழைப்பு, நேரம், பொறுப்புச் சுமை, சங்கடங்கள், தடங்கல்கள் இத்தியாதி.

ஆனால் முடிவில் யார் அதிக மன மகிழ்வுடன் இருப்பார்? அது ஊரறிந்த ரகசியம்.

நமக்கு எந்தக் குறையிருந்தாலும பிரச்சனையில்லை. ஆனால் நமக்கு நாமே எழுதிக் கழுத்தில் மாட்டிக்கொள்கிறோமே ‘நம்மாலாகாத் தன்மை’ என்ற அடையாள அட்டை – அதுதான் குறை! உண்மையிலேயே பெருங்குறை! அதன் விளைவு நம்மையே சாரும். நம் கழுத்தில் நாம் மாட்டிக்கொள்ளும் அந்த விலங்கைக் கழட்டித் தூரக் கடாசிவிட்டால் போதும். மகிழ்வான வாழ்விற்கு அதுவே நாம் செய்யும் மிகப் பெரும் உபகாரம். அதன்பிறகு நம்முடைய ஊனமோ, பலவீனமோ, எந்தக் குறையும் பெரிதாகத் தெரியாது.

இதற்கு வரலாறு நிறைய உதாரணங்களை நம் மேசையின்மேல் தூக்கி எறிகிறது. அதிலொன்றுதான் நாம் மேலே பார்த்த டெமாஸ்தெனஸ். கி.மு. நான்காம் நூற்றாண்டாவது ரொம்ப தூரம். சற்று நெருக்கத்தில் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு வருவோம்.

அமெரிக்காவில் ஒரு மனிதர் இருந்தார். ஏதாவது வியாபாரம் செய்து பிழைப்போம் என்று தம்முடைய 22ஆவது வயதில் தொழிலொன்றைத் தொடங்கினார் அவர். தோல்வியில் முடிந்தது.

வியாபாரம் சரிவரவில்லை, போகட்டும். சட்டமன்றத்திற்குப் போய் நாட்டிற்காவது உதவலாம் என்று தேர்தலில் போட்டியிட்டார்; அதிலும் தோல்வி. அது அவருடைய 23ஆவது வயது.

வயிறு பசித்தது. மீண்டும் தொழில் செய்துபார்ப்போம் என்று வியாபாரம் ஆரம்பித்தார். ம்ஹும்! மீண்டும் போண்டி. வயது 25.

அதற்கு அடுத்த ஆண்டு மனைவி இறந்து போனார். 27ஆவது வயதில் அவருக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டது. மீண்டும் அரசியலுக்குப் போவது என்று முடிவெடுத்து மூன்று முறை முயன்று மூன்று முறையும் தோற்றார். அதெல்லாம் 34, 37, 39 வயதுகளில்.

46ஆவது வயதில் மீண்டும் தோல்வி. 47 ஆவது வயதில் துணை ஜனாதிபதியாகலாம் என்று முயற்சி செய்தால் அதுவும் தோல்வி. 49ஆவது வயதில் மற்றொரு தோல்வி.

படிக்கும் நமக்கே மூச்சு வாங்கலாம். மனிதர் அசருவதாய் இல்லை. இறுதியில் அவரது 52ஆவது வயதில், “கூப்பிட்டாயா?” என்று வெற்றி எட்டிப் பார்க்க அமெரிக்க ஜனாதிபதியானார் அவர். அதன்பிறகு வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்து தலைநகர் வாஷிங்டனில் பெரிய சிலையாக அமர்ந்து கொண்டார்.

ஆம்! அவர் ஆபிரஹாம் லிங்கன்!

மனதின் இலக்கை எட்ட நமது குறைகள் தடையே அல்ல.

தடையெல்லாம் “என்னால் முடியாது” எனும் எண்ணம் மட்டுமே. அதுதான் குறை.

அதை நீக்குங்கள். மனம் மகிழ்வை உணரும்.

மனம் மகிழ, தொடருவோம்…

இந்நேரம்.காம்-ல் 22 ஜனவரி 2011 அன்று வெளியான கட்டுரை

<–முந்தையது–> <–அடுத்தது–>

<–ம. ம. முகப்பு–>

Related Articles

Leave a Comment